லக்கி பிளாசாவுக்கு வெளியே கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த இரு இல்லப் பணிப்பெண்களில் ஒருவரான அபிகேல் டனாவ் லெஸ்டேவின் இறுதி அஞ்சலியில் நண்பர்கள், உறவினர்கள் என பலர் பங்கேற்று துயரத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
கேலாங் பாருவில் நடந்த இறுதி அஞ்சலியில் லெஸ்டேவின் மகளான 21 வயது ஜாக்கி லைன் லெஸ்டேவால் பங்கேற்க முடியவில்லை. அவரது உறவினரான ரோனலின் கைபேசியில் செய்த காணொளி அழைப்பின் மூலம் தமது தாயாரின் இறுதி அஞ்சலி நிகழ்வைப் பார்த்தார். அப்போது, லெஸ்டேவின் உறவினரான ரோனலில் உடைந்து போய் கதறி அழுதார்.
உயிரிழந்த மற்றோர் இல்லப் பணிப்பெண்ணான 50 வயது நுக்கோஸின் இறுதி அஞ்சலியில் நேற்று நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் என கிட்டத்தட்ட 100 பேர் வரை கலந்துகொண்டனர். சின் மிங்கில் நடந்த இறுதி அஞ்சலியில் அவரது முதலாளிகளும் கலந்துகொண்டனர்.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் வெளிநாட்டு ஊழியர் பிரிவின் இயக்குநரான பெர்னார்ட் மேனன், திருவாட்டி நுக்கோஸ் 1992ல் இருந்து சிங்கப்பூரில் பணிபுரிவதாகக் கூறினார். இல்லப் பணிப்பெண்கள் நிலையம், வெளிநாட்டு ஊழியர் நிலையம் இரண்டையும் இப்பிரிவு மேற்பார்வையிடுகிறது.
பிள்ளைகள் இல்லாத திருவாட்டி நுக்கோஸ் தமது முதலாளியின் மூன்று பிள்ளைகளையும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக வளர்த்துள்ளார் என்று திரு மேனன் சேனல் நியூஸ் ஏஷியாவிடம் கூறினார்.
திருமதி லெஸ்டேவின் உடல் இன்று பிலிப்பீன்சுக்கு எடுத்துச் செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாட்டி நுக்கோசின் உடல் நேற்று மாலை நாடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.
லக்கி பிளாசாவுக்குப் பின்புறம் நட்மேக் சாலையோரம் உள்ள நடைபாதையில் ஞாயிறு மாலை நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய ஆறு பிலிப்பீன்ஸ் நாட்டு இல்லப் பணிப்பெண்களில் ஒருவரான 44 வயது லைலா ஃபுளோர்ஸ் லாவெடென்சியா, இருவரது இறுதி அஞ்சலியிலும் காணப்பட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நால்வரில் 37 வயது டெமெட் லிம்பாவ்வென், 44 வயது லைலா ஃபுளோரஸ் லாவ்டென்சியா, இருவரும் வீடு திரும்பிவிட்டனர். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாட்டி நுக்கோசின் சகோதரியான 56 வயது அர்சிலி அவர்களில் ஒருவர். மற்றவர் எக்னல் லேயுகான் லிம்பாவ்வென், 43.
விபத்து நடந்த அன்று நெருங்கிய தோழிகளான அந்த அறுவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக லக்கி பிளாசாவில் கூடியிருந்த னர். அவர்களை திடீரென மோதிய கறுப்பு நிற ஹோண்டா கார் அங்கிருந்த தடுப்பு வேலியை உடைத்துக்கொண்டு கடைத்தொகுதியின் கீழ்த்தளத்தில் உள்ள கார்நிறுத்துமிட சாலையில் விழுந்தது.
$253,000 நிதி திரட்டப்பட்டுள்ளது
விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நேற்று மாலை 4.45 மணி வரையில் $253,000க்குத் அதிகமான தொகை Giving.sg என்ற நிதி திரட்டு இணையத் தளத்தில் திரட்டப்பட்டுள்ளது.
தொகை, காயமடைந்த நான்கு பணிப்பெண்களிடமும் உயிரிழந்த இரு பணிப்பெண்களின் குடும்பத்தாரிடமும் ஒப்படைக்கப்படும்.
இல்லப் பணிப்பெண்கள் நலவாழ்வு நிதியத்திலிருந்து எவ்வாறு நிதி வழங்கப்படும் என்பதற்கு அறநிறுவனத்திற்கு சில வழிகாட்டிக் கொள்கைகள் இருப்பதாகத் தெரிவித்த திரு பெர்னார்ட், ஆறு பெண்களும் எவ்வாறு தொகை பிரித்து வழங்கப்படும் என்பதை இப்போது கூறமுடியாது என்றார்.
காயமடைந்தவர்களின் வேலைசெய்யும் நிலை நிரந்தரமாகப் பாதிக்கப்பட்டு, அவர்களால் தொடர்ந்து வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், அவர்களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் பராமரிக்கப்படுவதை உறுதிசெய்ய நாம் போதுமானதை வழங்க வேண்டும்.
உயிரிழந்த இருவரது குடும்பங்களையும் பொறுத்தவரையில், அந்த இருவர் மட்டுமே அவர்களது குடும்ப பாரத்தைச் சுமப்பவர்களாக உள்ளனர்.
நீண்ட கால உதவி எவ்வளவு தேவைப்படும் என்பதை கணித்து, அவர்களது குடும்பத்துக்கு உதவி வழங்கப்படும் என்றார் திரு பெர்னார்ட்.