சிங்கப்பூர் பொருளியல் நன்கு வளர்ச்சி கண்டு அதன் மூலம் சிங்கப்பூரர்களுக்கு நல்ல வேலைகள் உருவாக்கப்பட வேண்டுமென்றால், வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதில் அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க முடியாது என்று வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் பணியை அரசாங்கம் மிகவும் கவனமாக, சரிசமமான நிலையில் பரிசீலித்து முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.
“அதிக போட்டித்தன்மைமிக்க பொருளியலை உருவாக்க, நமது உள்ளூர் ஊழியரணியுடன் சேர்ந்து பணியாற்ற போதுமான அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.
“ஆனால், அதே சமயத்தில் அந்த வெளிநாட்டு ஊழியர்கள் நம்முடன் சேர்ந்து போட்டி போடுவார்கள் என்றும் நமக்குத் தெரியும்.
“அந்தப் போட்டியைச் சமாளிக்க நாம் நமது மக்களின் திறன்களை மேம்படுத்த வேண்டும்,” என்றும் அமைச்சர் விவரித்தார்.
இது குறித்து அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினர் பிரித்தம் சிங், ஹாலந்து- புக்கிட் தீமா குழுத் தொகுதி உறுப்பினர் லியாங் எங் ஹுவா கேட்ட கேள்விகளுக்கு திரு சான் பதிலளித்தார்.
“மிகச் சில வெளிநாட்டு ஊழியர்கள், குறிப்பாக நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் சிங்கப்பூருக்கு முக்கியமாக தேவைப்படும் துறைகளில் இருந்தால், அது வர்த்தக வாய்ப்புகளை இழப்பதற்குச் சமமாகும்.
“அதேவேளையில் மிக அதிகமான அளவில் வெளிநாட்டு ஊழியர்கள் இருந்தால், தாங்கள் நியாயமான முறையில் நடத்தப்படவில்லை என்று சிங்கப்பூரர்கள் நினைப்பதற்கு வாய்ப்புள்ளது.
“ஆக, இரு தரப்பினருக்கும் இடையே தர அளவிலும் எண்ணிக்கை அளவிலும் சரிசம நிலை இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் விளக்கினார்.
“உண்மையான போட்டி சிங்கப்பூரர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர் நிரந்தவாசிகளுக்கும் இடையே இல்லை.
“மாறாக, உண்மையான போட்டி என்பது சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், வெளிநாட்டு ஊழியர்கள் ஆகியோரைக் கொண்ட சிங்கப்பூர் குழுவுக்கும் இதர உலக நாடுகளுக்கும் இடையேதான் உள்ளது.
“இந்த சிங்கப்பூர் குழுதான் மற்ற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரர்களுக்கு நல்ல சம்பள வளர்ச்சியைக் கொண்டு வரும். குடியரசின் இந்த சரிசம நிலை சிங்கப்பூரர்களுக்கு நல்ல பலன்களை அளித்துள்ளது.
“உள்ளூர் வேலை வாய்ப்பு 2015ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 60,000 அதிகரித்துள்ளது.
“சிங்கப்பூரின் உள்ளூர் வேலை வாய்ப்புகளில் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் பிரிவினரின் விகிதம் 54 விழுக்காட்டிலிருந்து 57 விழுக்காட்டுக்கு உயர்ந்துள்ளது.
“வெளிநாட்டு ஊழியரணிக் கட்டுப்பாட்டை அரசாங்கம் தளர்த்த வேண்டும். போதிய அளவில் சிங்கப்பூரர்கள் தங்களின் வேலைகளைச் செய்ய முன்வருவதில்லை என்று கேட்டுக்கொண்டுள்ள நிறுவனங்களிடம், அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி உள்ளது. ஆக, சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களும் போட்டி பற்றி அச்சப்பட வேலையில்லை,” என்றும் திரு சான் வலியுறுத்தினார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity