வசதியில் பின்தங்கிய மாணவர்கள் குறிப்பாக அடிக்கடி பள்ளிக்கூட வகுப்புகளைப் புறக்கணிக்கும் பிள்ளைகள் கல்வி அமைச்சின் புதிய முன்னோடித் திட்டத்தின் மூலம் அதிக ஆதரவைப் பெறுவர். வகுப்புக்கு வந்து பாடம் கற்கும் சூழ்நிலையை ஏற்படுத்த அத்திட்டம் உதவிபுரியும்.
‘சமூக முன்னேற்ற முன்னோடி’ என்னும் அத்திட்டம் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஓர் அங்கம்.
வசதி குறைந்த பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு முறையாக வந்து பாடம் கற்பதற்கான ஆதரவு வழங்கும் நோக்கம் கொண்டது கல்வி மேம்பாட்டுத் திட்டம்.
உட்லண்ட்ஸ், கிரேத்தா ஆயர், பூன் லே வட்டாரங்களில் உள்ள 300க்கும் மேற்பட்ட தொடக்க நிலை, உயர்நிலை மாணவர்கள் பயன்பெறும் வகையில் இவ்வாண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை புதிய முன்னோடித் திட்டம் நடப்பில் இருக்கும்.
வசதி குறைந்த, வகுப்புகளைப் புறக்கணிக்கும் மாணவர்களை ஆரம்பகட்டத்திலேயே கண்டறியும் பள்ளிக்கூடங்கள் அது குறித்த விவரங்களை அந்தந்த வட்டார சமூகச் சேவை அலுவலகத்தில் இருக்கும் கல்வி மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளரிடம் அளிக்கும்.
அவர், சம்பந்தப்பட்ட மாணவரையும் அவரது குடும்பத்தையும் உள்ளூர் திட்டங்களுடனும் வளங்களுடனும் இணைப்பார்.
மாணவர் மீண்டும் பள்ளிக்கு முறையாகச் செல்ல அந்நடவடிக்கை உதவும்.
வீட்டுப்பாட கண்காணிப்பு, பாடப் பயிற்சி, கல்வி, விளையாட்டுகளில் செறிவூட்டல் வாய்ப்புகள், சமூக உணர்வு மேம்பாட்டு வழிகாட்டுதல் போன்றவற்றை திட்டம் உள்ளடக்கி இருக்கும்.
அதேவேளை, அந்தப் பிள்ளைகளின் குடும்பத்தினரும் பிள்ளை வளர்ப்பு, தோழமை மேம்பாடு ஆகியவற்றுக்கான திறன் ஆதரவு மற்றும் குழந்தை பராமரிப்புச் சேவைகளுக்கான உதவிகளை புதிய திட்டத்தின் வழி பெற முடியும். சமூக மேம்பாட்டு முன்னோடித் திட்டம் என்பது 2018 அக்டோபரில் அறிவிக்கப்பட்ட கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதி என்பதோடு ஏற்றத்தாழ்வைச் சமாளிக்க அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் விரிவான கடப்பாட்டின் ஓர் அங்கம் என்று இரண்டாம் கல்வி அமைச்சர் இந்திராணி ராஜா குறிப்பிட்டார்.
மார்சிலிங் சமூக இணைப்பு நிகழ்ச்சியின் தொடர்பில் நேற்று உரையாற்றும்போது அவர் இதைத் தெரிவித்தார். உதவி தேவைப்படும் பெரும்பாலான மாணவர்கள் வாடகை வீடுகளில் வசிப்பதாக அவர் கூறினார். வசதி குறைந்த குடும்பங்களுக்கான ஆதரவை விரிவாக்குவதில் அரசாங்கத்தின் பங்கு குறித்து சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ விளக்கினார்.