இவ்வாண்டு தொடங்கியதிலிருந்து மூன்று வேலையிட மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனால் வேலையிடங்களில் ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கின்றனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வேலையிட மரணங்களைத் தடுக்கும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து மனிதவள அமைச்சு 230 வேலையிடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளது.
இந்த விவரத்தை மனிதவள அமைச்சு அதன் ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று பதிவிட்டது. இரண்டு மாதங்களில் 400 அதிரடிச் சோதனைகளை நடத்த அது இலக்கு கொண்டிருக்கிறது.
கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் 12 வேலையிட மரணங்கள் பதிவானதாக தி நியூ பேப்பர் தெரிவித்தது.
இம்மாதம் 2ஆம் தேதியன்று கப்பலில் வேலை செய்துகொண்டிருந்த 40 வயது ஆடவர் ஒருவர் அதிலிருந்து கடலில் விழுந்தார். கப்பல் சிங்கப்பூர் திரும்பியதும் அவரது மரணத்தை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை உறுதி செய்தது.
அதிரடிச் சோதனைகளின்போது ஊழியர்களுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலைகளை அதிகாரிகள் கண்டுபிடித்ததால் நான்கு வேலையிடங்களில் வேலை நிறுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அவற்றின் வேலையிடங்களில் உள்ள குறைபாடுகளைச் சரிசெய்து, பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக முறையை மேம்படுத்திய பிறகு வேலை நிறுத்த ஆணை மீட்டுக்கொள்ளப்படும் என்று அமைச்சு கூறியது.
நிறுவனங்கள் அவற்றின் வேலையிட நடைமுறைகளை மறுஆய்வு செய்து ஊழியர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
“அதிரடிச் சோதனைகள் தொடரும். ஊழியர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிப்போருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று அமைச்சு தெரிவித்தது.