சிங்கப்பூர் விமானக் காட்சியில் பொதுமக்கள் காட்சி நாட்களுக்கான டிக்கெட்டுகளின் எண்ணிக்கை, இங்கு நிலவும் கொரோனா கிருமித்தொற்று நிலவரத்தை முன்னிட்டு பாதிக்கு மேல் குறைக்கப்படும் என்று அதன் ஏற்பாட்டாளரான எக்ஸ்பீரியா இவெண்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு லெக் செட் லாம் தெரிவித்துள்ளார்.
விமானக் காட்சியில் பங்கேற்க முன்பு பதிவு செய்திருந்த நிறுவனங்களில் 70க்கு மேற்பட்டவை, அண்மைய பயணக் கட்டுப்பாடுகள், கடுமையான நிறுவனக் கொள்கைகள் ஆகியவை காரணமாக கண்காட்சியிலிருந்து விலகிக் கொண்டுள்ளதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரு லெக் கூறினார்.
2018ஆம் ஆண்டில் பொதுமக்களின் பார்வைக்கான இரண்டு காட்சி நாட்களில் 70,000 பேர் வருகை புரிந்தனர் என்று குறிப்பிட்ட திரு லெக், இருப்பினும் இந்த ஆண்டு விமானக் காட்சியில் 930க்கு மேற்பட்ட நிறுவனங்களும் 45,000 வர்த்தக வருகையாளர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் விவரித்தார்.