அங்காடிக் கடைகள் சுத்தமானவையா என்பதைப் பொதுமக்கள் தெரிந்துகொள்ள ஏதுவாக அத்தகைய கடைகளில் இப்போது ஓர் அங்கீகார அடையாளச் சின்னத்தைப் பார்க்க முடியும். இதற்கான புதிய இயக்கம் நேற்றுத் தொடங்கியது. கொரோனா கிருமித்தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்திய இந்த காலகட்டத்தில், கடைகளில் தூய்மையை அதிகப்படுத்தவும் பொதுமக்களின் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் இந்தத் திட்டம் இடம்பெறுகிறது.
அங்காடிக் கடைகள் குறிப்பிட்ட சுகாதாரத் தரங்களைக் கட்டிக் காத்து வந்தால் அந்தச் சின்னத்தைப் பெற முடியும். தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று இந்த விவரங்களைத் தெரிவித்தது.
ஒரு கடையில் சமையல் கூடமும் சமையல் சாதனங்களும் சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன என்பதை கடை உறுதிப்படுத்த வேண்டும்; வீணாகும் உணவை முறையாக அப்புறப்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும்; கடை ஊழியர்களின் உடல்நலனைக் கண்காணிக்கும் முறை நடப்பில் இருக்க வேண்டும் என்று புதிய நிபந்தனைகள் தெரிவிக்கின்றன.
சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து வரும்படியும் சமூகப் பொறுப்புடன் நடந்துகொள்ளும்படியும் ஒவ்வொருவரையும் ஊக்கப்படுத்தும் சுவரொட்டிகளும் அங்காடி நிலையங்களைச் சுற்றிலும் ஒட்டப்பட்டு இருக்கின்றன.
சாப்பிட்டு முடிந்ததும் தட்டுகளைத் திருப்பி கடையில் கொண்டு கொடுங்கள். சாப்பாடு மேசைகளை அசுத்தப்படுத்தாதீர்கள். அடிக்கடி சோப்புப் போட்டு கைகளைக் கழுவுங்கள் என்று அந்தச் சுவரொட்டிகள் அறிவுரை கூறுகின்றன.
இந்தப் புதிய இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று ‘அவர் தெம்பனிஸ் ஹப்’ மையத்தில் நடந்தது. சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இத்தகைய இயக்கத்தை நாம் கொரோனா கிருமி பரவி இருக்கும் காலகட்டத்தில் மட்டும்தான் செயல்படுத்துகிறோம் என்று கூறிவிடமுடியாது.
எல்லாரும் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்கான புரிந்துணர்வை இப்போது அதிகப்படுத்த வேண்டி இருக்கிறது.
தூய்மையான நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இவற்றை எல்லாம் தொற்றுநோய்க் காலத்தின்போது மட்டுமின்றி எப்போதுமே நாம் கடைப்பிடித்து வரவேண்டும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
இப்படிச் செய்தால் எதிர்காலத்திலும் கிருமிகள் நம்மை ஒன்றும் செய்ய முடியாது என்றார் அவர்.
பாலர்பள்ளிகள், பள்ளிக்கூடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா இடங்கள், கடைத்தொகுதிகள் ஆகியவை இவற்றில் அடங்கும். இவை ஒவ்வொன்றுக்கும் ஏற்ப துப்புரவு நிபந்தனைகள் மாறுபடும் என்றும் வாரியம் தெரிவித்து உள்ளது.