உலகளவிலும் சிங்கப்பூரிலும் வேகமாகப் பரவிவரும் கொவிட்-19 கிருமித் தொற்றால் சிங்கப்பூரில் உள்ள பள்ளிவாசல்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்று முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்துள்ளது.
நாளை (மார்ச் 26) வரையில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருக்கும் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கிருமித்தொற்றின் சீற்றம் குறையாததை அடுத்து பின்னர் அறிவிக்கப்படும்வரை பள்ளிவாசல்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என முயிஸின் தலைமை நிர்வாகி ஈசா மசூத் தெரிவித்தார்.
சமூகத்தில் கிருமித்தொற்றின் அபாயம் மேலோங்கி இருப்பதால் மூத்த தலைவர்களை உள்ளடக்கிய இஸ்லாமிய சட்டக் குழுவான ‘ஃபத்வா’ குழு நேற்று முன்தினம் கூடியபோது, தொடர்ந்து பள்ளிவாசல்களை மூடவும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையைத் தற்காலிகமாக ரத்து செய்யவும் பரிந்துரை செய்ததாகக் கூறினார் முஃப்தி டாக்டர் நஸிருதின் முகமது நசிர்.
இந்தப் பரிந்துரைகளை முன்வைக்க இரு கொள்கைகளை வழிகாட்டுதலாக அக்குழு எடுத்துள்ளதை முஃப்தி விளக்கினார்.
அனைத்து விதமான தீங்குகளைத் தவிர்ப்பதும் அபாயத்துக்கும் தீங்குக்கும் இட்டுச்செல்லும் எல்லா கதவுகளையும் மூடுவதும் அந்த இரு கொள்கைகள் என அவர் குறிப்பிட்டார்.
தொடர்ச்சியாக மூன்று வெள்ளிக்கிழமை தொழுகைகளில் ஈடுபடாதது குறித்த கவலை கொள்ளவேண்டாம் என்றும் இதுபோன்ற சூழலில் அது பொருந்தாது என்றும் முஃப்தி தெரிவித்தார்.
இதற்கிடையே டாக்சி, தனியார் வாடகை கார், உணவு விநியோக ஓட்டுநர்கள் உட்பட பல இடங்களுக்குச் சென்று வேலை செய்வோருக்கு தொழுகை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் பொருட்டு, தீவு முழுவதும் 19 பள்ளிவாசல்களில் சிறிய அளவிலான தொழுகை இடங்கள் மதிய ‘ளுஹர்’ தொழுகைக்கும் மாலை ‘அசர்’ தொழுகைக்கும் திறக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
இம்மாதம் 13ஆம் தேதி முதல் சிங்கப்பூரின் அனைத்து பள்ளிவாசல்களும் மூடப்பட்டுள்ளன. சிலாங்கூரில் நடந்த சமய நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருந்தாலும் வேறு வழிகளில் சமூகத்திற்கு அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று முயிஸ் தலைமை நிர்வாகி ஈசா மசூத் கூறினார்.
பள்ளிவாசல் நிகழ்ச்சிகளும் சமய சொற்பொழிவுகளும் இணையம் மூலம் வழங்கப்படும் என்றும் ஊடகங்கள் மூலம் புதிய பழக்கவழக்கங்கள் குறித்த சமூக செய்திகள் மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
குறைந்த வருமான குடும்பங்களுக்கு ஆதரவு வழங்குவதும் பள்ளிவாசல்களின் செயல்பாடுகளில் ஒன்று என்பதால் மூடப்பட்ட நிலையிலும் அந்தச் சேவைகள், குறிப்பாக முதியோருக்கு, ‘ஸகாத்’ எனப்படும் உதவித் தொகை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீண்டகால ஸகாத் நிதி ஆதரவுத் திட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு சமூக மேம்பாட்டு அதிகாரிகளும் பள்ளிவாசல் நட்புக் குழுவினரும் உதவி செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
31 சமூக மேம்பாட்டு பள்ளிவாசல்களிலும் ஸகாத் நிதி ஆதரவு தொடர்ந்து வழங்கப்பட்டு வரும்.