தொடர்ச்சியாக நான்காண்டு சரிவுக்குப் பிறகு, கடந்த ஆண்டு சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் 0.5 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2019ல் 39,253 குழந்தைகள் பிறந்தன. இந்த எண்ணிக்கை 2018ல் 39,039 ஆக இருந்தது.
கடந்த ஆண்டு சிங்கப்பூர் அதிகமான குழந்தைகளை வரவேற்ற அதேநேரத்தில், இறப்பு எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.
அதிகரித்து வரும் வயதான மக்கள்தொகையினால் சிங்கப்பூரில் இறப்பவர்களின் எண்ணிக்கை கடந்த பத்தாண்டுகளில் ஆண்டுதோறும் தொடர்ந்து கூடி வருகிறது.
கடந்த ஆண்டு 21,385 பேர் இறந்தனர். 2018ன் 21,282 இறப்பைவிட இது 0.5% அதிகம்.
கடந்த 2019ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை விவரங்கள், மார்ச் மாதம் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் வெளியிட்ட சிங்கப்பூர் மக்கள்தொகை பற்றிய 2019 நான்காம் காலாண்டு அறிக்கையில் உள்ளன.
எப்படியிருந்தாலும், சிங்கப்பூரின் பிறப்பு விகிதத்தில் ஏற்படும் எத்தகைய அதிகரிப்பும் மகிழ்ச்சிக்குரியது என்றார் கொள்கை ஆய்வுக் கழகத்தின் சமூக ஆய்வகத்தின் தலைவர் டாக்டர் மேத்யூ மேத்யூஸ் கூறினார்.
கடந்த ஆண்டு சிங்கப்பூரர்களின் மொத்த பிள்ளைப்பேறு விகிதம் 1.14 ஆக இருந்தது, இது உலகின் மிகக் குறைவான ஒன்றாகும்.
குழந்தைப் பேற்றை ஊக்குவிக்க அரசாங்கம் பல நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. பெற்றோருக்கு குழந்தை போனசாக ரொக்கத் தொகை, கருவுறுதல் சிகிச்சைக்கான கட்டணங்களை அதிகக் கட்டுப்படியாகக்கூடியதாக வைத்திருத்தல், பாலர்பள்ளி மானியங்கள் அதிகரிப்பு, பெற்றோர் வேலை, குடும்பம் இரண்டினது கடமைகளையும் கையாள உதவும் வகையில் அதிக நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை ஊக்குவித்தல் போன்றவை இதில் அடங்கும்.
எனினும், இந்த ஆண்டில் கொவிட்-19 பரவல் காரணமாக எதிர்காலத்தில் குழந்தைப்பேறு குறையலாம் என்று கல்வியாளர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தனர்.
பொருளியல் நிலைமை மந்தமாக இருந்த கடந்த சில ஆண்டுகளில் பிறப்புவிகிதம் குறைந்திருந்ததை டாக்டர் மேத்யூ சுட்டினார்.
மேலும் பலர் திருமணம் செய்துகொள்ளாமலேயே உள்ளனர். சிங்கப்பூரில் திருமணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்வோரும் குறைவானவர்களே என்று கல்வியாள்கள் குறிப்பிட்டனர்.
கடந்த ஆண்டுகளில் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வந்ததால், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடிய வயதிலிருக்கும் பெண்களில் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று கூறினார் தேசிய பல்கலைக்கழகத்தில் லீ குவான் இயூ பொதுக் கொள்கைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் டான் போ லின்.
குறைந்து வரும் பிறப்பு விகிதமும் அதிகரித்து வரும் இறப்பு விகிதமும் சேரும்போது ஏற்படும் விளைவு கவலைக்குரியது என்று கல்வியாளர்கள் கூறினர்.