கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில் பொதுத் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய தேவையான தற்காலிக நடவடிக்கைகள் தொடர்பில் வரும் வாரத்தில் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்படும்.
நாடாளுமன்றத் தேர்தல் (கொவிட்-19 சிறப்பு ஏற்பாடுகள்) மசோதா தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த தேர்தல் துறை, வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் சுகாதாரமும் பாதுகாப்புமே மிக முக்கியம் எனத் தெரிவித்தது.
கொரோனா கிருமித்தொற்றுச் சூழலில் அடுத்த பொதுத் தேர்தலை நடத்த வேண்டுமெனில், பொதுத் தேர்தலைப் பாதுகாப்பாக நடத்துவதை உறுதிசெய்திடத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வகைசெய்யும் நெருக்கடிநிலைத் திட்டங்களைத் தேர்தல் துறை தயார்செய்தல் வேண்டும் என அத்துறை விளக்கம் அளித்தது.
“நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோரின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான தற்காலிக ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த தேர்தல் துறைக்கு அனுமதி அளிக்கத் தேவையான சட்ட அம்சங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளன,” என்று தேர்தல் துறை கூறி இருக்கி றது.
2021 ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் அடுத்த பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
இந்நிலையில், நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் நாடாளுமன்றத் தேர்தல் (கொவிட்-19 சிறப்பு ஏற்பாடுகள்) மசோதா அடுத்த பொதுத் தேர்தலுக்குள் நடப்புக்கு வந்துவிடும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆயினும், இப்போதைக்கு கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக பள்ளி, வேலையிடம் தவிர்த்து வேறு இடங்களில் பத்துப் பேருக்கு மேல் ஓரிடத்தில் ஒன்றுகூட அனுமதி கிடையாது.
இதே நிலை தொடர்ந்தால் வழக்கமான பிரசாரக் கூட்டங்களோ, பேரணிகளோ சிங்கப்பூரில் உள்ள பொது இடங்களில் இடம்பெற வாய்ப்பு இருக்காது.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள் என்று நாடாளு மன்ற உறுப்பினர்கள் சிலரிடம் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ கருத்து கேட்டது.
சமூக ஊடகங்கள், நிகழ்நேர காணொளி ஒளிபரப்பு ஆகியவற்றின் மூலமாக வாக்காளர்களைச் சென்றடைய முயல்வோம் என்று அவர்கள் பதில் கூறினர்.