மேரிமவுண்ட் எம்ஆர்டி நிலையம் அருகே உள்ள ஷுன்ஃபு சந்தையில் முகக்கவசம் அணியாமல் இருந்த 40 வயது சிங்கப்பூர் மாது ஒருவரிடம் போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அங்கே இருந்தவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர் மீது, வேண்டுமென்றே மற்றவருக்கு காயம் விளைவித்தது, பொது இடத்தில் தொந்தரவு செய்தது, பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிக்க தவறியது ஆகியவை தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மற்றவர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைக் காட்டும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.
முகக்கவசம் அணியுமாறு அறிவுறுத்திய 47 வயது மாதை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எண் 320 ஷுன்ஃபு ரோட்டில் நேற்று முன்தினம் நண்பகல் 12.15 மணியளவில் உதவி கோரி தனக்கு அழைப்பு வந்ததாக போலிஸ் கூறியது.
கொவிட்-19 சூழலில் பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் தயங்காது என்று போலிஸ் எச்சரித்துள்ளது.
தகாத முறையில் நடந்துகொண்ட அந்த மாதின் பொறுப்பற்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பீஷான்-தோ பாயோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சோங் கீ ஹியோங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று முன்தினம் பதிவிட்டார்.