பீப்பள்ஸ் பார்க் சென்டர் தனியார் குடியிருப்புக் கட்டடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் கைதான அந்த எட்டு ஆடவர்களும் ஒரு மாதும் 18க்கும் 28 வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குற்றவியல் புலனாய்வு துறை, போலிஸ் உளவுத் துறை, மத்திய போலிஸ் பிரிவு ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் மூன்று நாட்களாக நடத்திய தேடுதல் வேட்டைக்குப் பிறகு இந்த ஒன்பது பேரும் பிடிபட்டனர்.
முன்னதாக, கலவரம் நடந்த இடத்தில் மூவரை போலிஸ் கைது செய்தது. மாது ஒருவர் தொடர்பில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரு கும்பல்கள் மோதிக்கொண்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலிஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இச்சம்பவம் அக்குடியிருப்பு வளாகத்தின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடிக்கும் காணொளியில் பாராங் கத்தி ஏந்திய ஒரு கும்பல் மற்றொரு கும்பலைத் தாக்குவது தெரிந்தது.
சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட மூவரில் 19 வயது முகம்மது ஷஸ்ரில் ஹைக்கல் எனும் இளையரும் அடங்குவார். கலவரத்தில் காயமடைந்த அவர், சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கை, கால், முகம், வயிற்றுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அவரது தாயார் கூறினார். ஹைக்கலின் உடல்நிலை சீராக இருப்பதாக அவரது தாயார் சொன்னார்.
பீப்பள்ஸ் பார்க் சென்டர் தனியார் குடியிருப்புக் கட்டடத்தின் 16வது தளத்தில் அதிகாலை 3.30 மணியளவில் கலவரம் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைக்கலும் அவரது நண்பரும் மோட்டார்சைக்கிள் தலைக்கவசங்களைக் கொண்டு தாக்கப்பட்டனர். மேலும், பாராங்கத்தி ஏந்திய குறைந்தது மூவர் ஹைக்கலைத் தாக்கியதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
அதையடுத்து, தாக்குதல் நடத்திய கும்பல் சம்பவ இடத்தைவிட்டு தப்பிச் சென்றது. அப்போது ஆடவர்களில் ஒருவர் மாது ஒருவரை இழுத்துச் சென்றார்.
இந்நிலையில், இந்தக் கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இருவரை போலிஸ் தேடி வருகிறது.