கொவிட்-19 கிருமித்தொற்றுச் சூழலில், இவ்வாண்டு நோன்புப் பெருநாளன்று பிறரது வீடுகளுக்குச் செல்வதும் ஒன்றுகூடல்களும் தவிர்க்கப்படவேண்டும் என சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் (முயிஸ்) அறிவுறுத்தி இருக்கிறது.
இம்மாதம் 24ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.
இந்நிலையில், நோன்புப் பெருநாளுக்கு முதல் நாள் அவரவர் வீடுகளில் குடும்ப உறுப்பினர்களோடு இணைந்து தக்பிர் ஓதும் படி முஸ்லிம் சமூகத்தினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
முஃப்தியின் தலைமையில் இன்னும் பல சமயப் போதகர்களும் பங்குபெறும் அந்த நிகழ்வு, யூடியூப்பில் ‘சலாம்எஸ்ஜி டிவி’ வழியாகவும் முயிஸ் மற்றும் பள்ளிவாசல்களின் இணையத்தளங்கள் வழியாகவும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.
அதன்பிறகு, நோன்பு பெருநாளின்போது முஸ்லிம்கள் நிறைவேற்ற வேண்டிய சமயக் கடமைகள் குறித்து ‘சலாம்எஸ்ஜி டிவி’ வழியாக முஃப்தி நஸிருதீன் முகம்மது நஸீர் உரையாற்றுவார். முன்னாள் முஃப்தி ஃபத்ரிஸ் பக்காரமும் சிறப்பு விருந்தினராக அதிபர் ஹலிமா யாக்கோப்பும் அந்நிகழ்வில் பங்கேற்பர்.
சிங்கப்பூரில் உள்ள 70 பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருப்பதால் நோன்புப் பெருநாளன்று காலையில் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்ப உறுப்பினர்களோடு தாங்கள் வசிக்கும் வீடுகளிலேயே பெருநாளைக் கொண்டாடுவர்.
வழக்கமாக நோன்புப் பெருநாளன்று காலையில் தக்பிர் ஓதவும் பெருநாள் தொழுகை மேற்கொள்ளவும் சிறப்புரையைக் கேட்கவும் அவர்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வர். இவ்வாண்டில் அவர்கள் ‘வர்ணா 94.2’ மலாய் வானொலி அல்லது உள்ளூர் பள்ளிவாசல்களின் ஃபேஸ்புக் பக்கம் வழியாக இணைந்து ‘தக்பிர்’ ஓதலாம்.
நோன்புப் பெருநாளன்று வீடுகளில் தொழுகை மேற்கொண்ட பிறகு முஃப்தி பெருநாள் சிறப்புரை ஆற்றுவார். அவரது உரை, வானொலியிலும் ‘சலாம்எஸ்ஜி டிவி’ போன்ற இணைய ஒளிவழிகளிலும் நேரடியாக ஒலிபரப்பு செய்யப்படும்.
“பொது இடங்களிலும் தனியார் இடங்களிலும் ஒன்றுகூட தேசிய அளவில் விதிக்கப்பட்டு உள்ள தடையை முஸ்லிம்கள் மதித்து நடக்க வேண்டும்.
“அந்த வகையில், நோன்புப் பெருநாளன்று உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். பெருநாளுக்காகப் பொருட்கள் வாங்கச் செல்வோர் தனியாகச் செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு விரைவாக அதை முடித்துக்கொண்டு, வீடு திரும்பவேண்டும்.
“வருகைபுரிவதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படும் வரை மூத்த குடும்ப உறுப்பினர்கள் போன்ற தங்கள் அன்புக்குரியவர்களின் வீடுகளுக்குச் செல்வதைத் தள்ளிவைக்க வேண்டும்,” என்று முயிஸ் நேற்று அறிக்கை வெளியிட்டது.
இதனிடையே, முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நேற்றுக் காலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மற்றவர்களின் வீடுகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை ஜூன் 1ஆம் தேதிக்குப் பிறகு தளர்த்துவது தொடர்பில் அதிகாரிகள் கவனமாகப் பரிசீலித்து வருவதாக அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.
“வீடுகளில் கூட்டமாக உள்ளது என அண்டைவீட்டாரிடம் இருந்து புகார் வந்தால் நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும்,” என்று திரு மசகோஸ் கூறினார்.
இந்தப் பண்டிகைக் காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்துக் கேட்டதற்கு, அந்த ஊழியர்கள் தேர்வு செய்துள்ள ‘இமாம்’களுக்கு அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவர் என அமைச்சர் சொன்னார்.
அதே வேளையில், சமய வேறுபாடின்றி 200,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்புப் பெருநாள் சிறப்புணவை வழங்க சிறப்புப் பணிக்குழுவுடனும் மனிதவள அமைச்சுடனும் தாங்கள் பணியாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.