கொவிட்-19 கிருமித் தொற்றை முறியடிப்பதற்கான போராட்டத்தில், வீட்டிலேயே இருந்து தங்களின் பங்கை ஆற்றும் சிங்கப்பூரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரசாங்கம் பயனீட்டுக் கட்டணங்களில் கழிவு வழங்கவுள்ளது.
குறைந்தது ஒரு சிங்கப்பூரர் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பயனீட்டுக் கட்டணத்தில் $100 கழிவு ஒரு முறை வழங்கப்படும்.
ஒற்றுமைக்கான பயனீட்டுத் தொகை என இந்தத் திட்டத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத பயனீட்டுக் கட்டணத்தில் அந்தச் சலுகை வழங்கப்படும்.
கொவிட்-19 ஆதரவுத் திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு உதவியளிக்க மேலும் $800 மில்லியன் ஒதுக்கப்படும்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாகத் தங்களின் வேலைகளை இழந்தவர்கள், சம்பளம் இல்லாத விடுப்பில் உள்ளவர்கள், எதிர்வரும் மாதங்களில் சம்பளக் குறைவை எதிர்நோக்கக் கூடியவர்கள் அதன் மூலம் பலனடைவர்.