ஒரு விபத்தைத் தொடர்ந்து ஒரு நோயாளிக்கு போதுமான மருத்துவ விடுப்பு வழங்காததால் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கெவின் யிப் மேன் ஹிங்கிற்கு எட்டு மாதத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளினிகல்ஸ் மருத்துவ மையத்தில் உள்ள ‘சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் அண்ட் ஆர்த்தோபிடிக்ஸ் கிளினிக்கில் பணிபுரியும் டாக்டர் கெவினுக்கு கடந்த ஆண்டு இதேபோன்ற குற்றத்திற்காக எட்டு மாதம் தடை விதிக்கப்பட்டது.
அண்மைய சம்பவத்தில் அவர் ஐந்து குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார். சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் ஒழுங்குமுறை விசாரணை மன்றத்தில் இரு குற்றச்சாட்டுகளை டாக்டர் கெவின் யிப் ஒப்புக்கொண்டார். மற்ற மூன்றும் கவனத்தில் கொள்ளப்பட்டன.
ஓட்டுநராக பணிபுரியும் சிங்கப்பூரரான நோயாளி அளித்த புகாரைத் தொடர்ந்து டாக்டர் யிப் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
முதல் குற்றச்சாட்டு வலது கை நடு விரல் முறிவுக்குப் பெற்ற சிகிச்சை தொடர்பாக இடம்பெற்றது. கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 10ஆம் தேதி அன்று தன்னிடம் சிகிச்சை பெற வந்த அந்த நோயாளிக்கு போதிய மருத்துவ விடுப்புக்கு டாக்டர் யிப் பரிந்துரைக்கவில்லை. அதே நோயாளி, மீண்டும் அதே ஆண்டு ஜூலை மாதம் இடது தோள்பட்டை காயத்துக்காக மீண்டும் வந்த போதும் டாக்டர் யிப் உரிய மருத்துவ விடுப்பு கொடுக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் லேசான வேலைக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாட்களில் அந்த ஆடவரின் முதலாளியுடன் டாக்டர் மேற்கொண்ட உடன்பாட்டினால் ஊழியர் வேலைக்குச் செல்லவில்லை. இந்த ஏற்பாடு குறித்தும் தெரிவித்த மன்றம், டாக்டர் யிப் அந்த ஊழியரை ஆபத்தான நிலையில் வைத்துள்ளார் என்றார். அந்த நாட்களில் அவர் வேலைக்குச் செல்லாதபோது அவரது சம்பளம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என்று அது கூறியது.