கொவிட்-19 கிருமித் தொற்று நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், எவரும கவனிக்கப்படாமல் விட்டுவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாக வாடகை வீடுகளில் வசிக்கும் 50,000 குறைந்த வருமானக் குடும்பங்களைச் சென்றடையும் வகையில் இந்த மாதத்தில் புதிய முயற்சி ஒன்று தொடங்கப்படவுள்ளது.
அறக்கட்டளைகள், அடித்தளக் குழுக்கள் போன்ற பங்காளிகளுடன் இணைந்து, “அதிக ஒருங்கிணைப்புடன் கூடிய, வலுவானதொரு சமுதாய பாதுகாப்பு வலையை ” அமைக்கும் பெருமுயற்சியை அரசாங்கம் தொடங்கும் என்று
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டெஸ்மண்ட் லீ இன்று சொன்னார்.
வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் எந்தெந்த வழிகளில் உதவிகளைப் பெறமுடியும் என்பது குறித்த தகவல்களை ‘எஸ்ஜி கேர்ஸ் சமூகக் கட்டமைப்பு’ குறுஞ்செய்தியாக அனுப்பும்.
உதவி தேவைப்படுகிறதா எனத் தெரிந்துகொள்ளவும் தேவைப்படும் உதவிகள் கிடைக்க வழிசெய்யவும் ஏதுவாக பணியாளர்களும் தொண்டு ஊழியர்களும் அந்தக் குடும்பங்களைத் தொலைபேசி வழியாகவோ அல்லது நேரில் சென்றோ தொடர்புகொள்வர் என அமைச்சர் லீ விளக்கினார்.
கிருமிப்பரவலின்போது அரவணைக்கும் அமைப்பு
உதவி தேவைப்படும் குடும்பங்களுக்குச் சிறந்த சேவையை ஆற்றும் விதமாக, ‘எஸ்ஜிகேர்ஸ் சமூகக் கட்டமைப்பு’ கடந்த இரண்டு
ஆண்டுகளில் பல்வேறு அரசாங்க அமைப்புகள், சமூக சேவை அமைப்புகள், அடித்தள மற்றும் பிற குழுக்களை
ஒருங்கிணைத்து வருகிறது. அந்த அமைப்பு தனது ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு முயற்சிகளின் வேகத்தை முடுக்கிவிட்டிருப்பதாக திரு லீ கூறினார். உதவி நாடுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக அவர் சொன்னார்.
கொவிட்-19 கிருமிப் பரவலையடுத்து, உளவியல் மற்றும் உணர்வுபூர்வ ஆதரவு வழங்குவதற்காக கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய அக்கறை நேரடித் தொலைபேசி எண்ணுக்குக் கிட்டத்தட்ட 16,000 அழைப்புகள் வந்து இருப்பதாகஅமைச்சர் லீ குறிப்பிட்டார். அவற்றில் பெரும்பாலான அழைப்புகள் வேலைப் பாதுகாப்பு அல்லது குடும்பப் பிரச்சினைகளால் ஏற்பட்ட பதற்றம் அல்லது மனஅழுத்தம் தொடர்பானதாக இருந்தன.
ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் என 720க்கும் மேற்பட்டோர், அந்த 24 மணி நேர தொண்டூழியச் சேவையில் ஈடுபட்டனர். காம்கேர், கொவிட்-19 உதவித் திட்டங்கள் போன்ற அரசாங்க நிதி உதவித் திட்டப் பணிகளில் உதவிட சமூக சேவை அலுவலகங்களில் கூடுதலாக 383 பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.