கொவிட்-19 கொள்ளைநோயின் பாதிப்பில் இருந்து சிங்கப்பூர் மீண்டுவர சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் ஊழியர்கள், மாணவர்களின் ‘கொவிட் தலைமுறை’ உருவாகாமல் தடுக்க பாடுபட வேண்டும் என்றும் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்து உள்ளார்.
நாடாளுமன்றத்தில் வலிமைக்கான வரவுசெலவுத் திட்ட விவாதத்தை முடித்து வைத்துப் பேசிய நிதி அமைச்சருமான திரு ஹெங், வேலை மற்றும் திறன் தொகுப்புத் திட்டம் கொவிட்-19 பொருளியல் சரிவு தாக்கத்திலிருந்து ஊழியர்களை மீட்க மூன்றுவிதத்தில் உதவிபுரியும் என்றார்.
வேலைகளைப் பாதுகாப்பது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது, அதிகம் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு கூடுதல் உதவி நல்குவது போன்ற வழிகளில் அத்திட்டம் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.
“சிங்கப்பூரில் கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 73,000 பேர் வேலையின்றி இருந்தனர். இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை 100,000க்கும் மேல் செல்லக்கூடும். கடந்த 2003ஆம் ஆண்டு சார்ஸ் தொற்று நோய் காலத்தில் வேலையின்றி இருந்தோர் 91,000 என்ற எண்ணிக்கையை தாண்டிவிடக்கூடியதாக இவ்வாண்டின் வேலையிழப்பு நிலவரம் இருக்கும்,” என்றார் திரு ஹெங்.
2009 உலக நிதி நெருக்கடி யின்போது உலகளவில் 22 மில்லியன் பேர் வேலை இழந்ததாகவும் கொரோனா கொள்ளை நோய் அதைவிட ஆக அதிகமாக 25 மில்லியனுக்கும் மேற்பட்டோரின் வேலைகளைப் பறித்துவிடக்கூடும் என்றும் அனைத்துலக தொழிலாளர் நிறுவனம் வெளியிட்ட கூற்றை அவர் மேற்கோள் காட்டினார்.
“வேலையிழந்தோர் எண்ணிக்கையைத் தாண்டி மேலும் அதிக பொருளியல் வீழ்ச்சி ஏற்படலாம்.
“வேலைகளைத் தக்கவைத்துக்கொள்வோர்கூட பதவி உயர்வின்மையையும் கணிசமான வருவாய் இழப்பையும் சந்திக்கக்கூடும்.
“இந்நிலைமை மோசமான சுழற்சிக்கு இட்டுச்செல்லும். அதாவது, வருவாய் இழப்பால் வாங்கும் திறன் குறையும். வாங்கும் திறன் குறைந்தால் வர்த்தகம் பாதிக்கப்படும். அதனால் ஊழியர் தேவை குறையும்,” என்று துணைப் பிரதமர் விளக்கினார்.
“உலக நிதி நெருக்கடி ஏற்பட்ட போது அதற்கு முந்திய நிலையை மீண்டும் அடைய உலக நாடுகளுக்கு எட்டு முதல் பத்து ஆண்டுகள் வரை தேவைப்பட்டன. அவ் வளவு அதிக காலமா என்று நாம் வியந்துவிடக்கூடாது. கொவிட்-19 தாக்கத்திலிருந்து மீள அதேபோல அல்லது அதைவிட கூடுதல் காலம் நமக்குத் தேவைப்படலாம்.
“இருந்தபோதிலும் கொவிட்-19 ஏற்படுத்தும் மோசமான சில சிரமங்களை சிங்கப்பூர் தவிர்த்து வந்திருக்கிறது.,” என்றும் மன்றத்தில் திரு ஹெங் கூறினார்.
“பத்து மாதங்களுக்கு மேற்பட்ட காலத்தில் 1.9 மில்லியன் வேலைகளை ஆதரிக்க வேலை ஆதரவுத் திட்டம் மூலம் அரசாங்கம் $23.5 பில்லியனைச் செலவிடும். உள்ளூர் ஊழியர்களை வேலை யில் தக்கவைத்துக்கொள்ள முதலாளிகளுக்கு அளிக்கப்படும் சம்பள சலுகை இது. இவற்றில் மூன்றில் இரு பங்கினர் சிறிய-நடுத்தர நிறுவன முதலாளிகள்.
“இதுவரை $11 பில்லியனுக்கு மேல் வழங்கப்பட்டுவிட்டது. வர்த்தகம் மட்டும் வளரவேண்டும் என்பதற்காக இதனைச் செய்யவில்லை. சம்பளச் செலவை ஓரளவுக்கு ஈடுகட்டுவதற்கான திட்டம் இது. இச்செலவைச் சரிக்கட்ட உதவினால் முதலாளிகள் தங்களது ஊழியர்களுக்கு வேலையையும் சம்பளத்தையும் தொடர்ந்து தருவார்கள்,” என திட்டத்தின் நோக்கத்தை விவரித்தார் திரு ஹெங்.