கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் பாதுகாப்பாக பொதுத்தேர்தலை நடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கூட்டங்களையும் நேரடித் தொடர்புகளைக் குறைக்கும் வகையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவிருக்கின்றன.
பாதுகாப்பு இடைவெளி உட்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளுடன் வாக்காளர் வாக்களிப்பதற்கான நேர அட்டவணை, வாக்காளர்களுக்கு கை சுத்திகரிக்கும் கிருமி நாசினி, ஒருமுறை பயன்படுத்தப்படும் கையுறை, வாக்கைப் பதிய வாக்காளர்கள் தங்கள் பேனாக்களை பயன்படுத்த அனுமதி போன்ற மேலும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றன.
பாதுகாப்பான தேர்தலுக்கான ஏற்பாடுகளை நேற்று வெளியிட்ட தேர்தல் துறை, தேர்தலில் தொடர்புடைய அனைவரதும் குறிப்பாக மூத்த வாக்காளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது முக்கியமாகக் கருத்தில் கொள்ளப் பட்டுள்ளதாகக் குறிப்பிட்டது.
உடல்நலம் குன்றியவர்கள், கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்புடையவர்களுடனான நேரடித் தொடர்பை வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் முடிந்தவரை குறைக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படும் என்றது தேர்தல் துறை.
நீண்ட காலத்திற்கு கொவிட்-19 கிருமித்தொற்று நிலைமை நீடிக்கும் என்று பொது சுகாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், சிங்கப்பூர் அரசமைப்புச் சட்டத்தின்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதிக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்பதால், நோய்ப் பரவல் முற்றிலும் நீங்காத நிலையில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதனால், தொற்றுநோய் மேலும் பரவுவதற்கான சூழலை தேர்தல் ஏற்படுத்தக்கூடிய அபாயம் இருப்பதாக சிலர் எச்சரித்துள்ளனர்.
பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வசதியாக நாடு முழுவதும் 1,100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதன்படி சராசரியாக ஒரு வாக்களிப்பு நிலையத்தில் 2,400 பேர் வாக்களிப்பர். கடந்த தேர்தலில் 880 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு, ஒரு நிலையத்தில் சராசரியாக 3,000 பேர் வாக்களித்தனர்.
வாக்களிப்பு நிலையங்களில் ஒரே நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் வாக்காளர்கள் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், ஒவ்வொருவருக்கும் பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மணி நேர அவகாசம் கொண்ட நேர அட்டவணை வாக்குச் சீட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். சிங்பாஸ் திறன்பேசி செயலியிலும் அந்தத் தகவலை வாக்காளர்கள் பெறலாம்.
65 வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கும் காலை நேரத்தில் வாக்களிப்பு நேரம் பரிந்துரைக்கப்படும். மூன்றில் இரண்டு குடும்பங்களில் முதியவர்கள் இருப்பதால் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திலும் சராசரியாக 400 முதிய வாக்காளர்கள் இருப்பர் என கணிக்கப்பட்டுள்ளது. முதியோரை அழைத்துவரும் குடும்பத்தினர் அதே நேரத்தில் வாக்களிக்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட நேரத்தில் வாக்காளர்களை வாக்களிக்க ஊக்குவிக்கும் தேர்தல் துறை, மற்ற நேரங்களில் வந்தால் அதிக நேரம் காத்திருக்க நேரிடும் என்றது. http://VoteQ.gowhere.gov.sg எனும் இணையப்பக்கம் வழி வாக்களிப்பு நிலையத்தில் வரிசையின் நீளத்தை அறிந்துகொள்ளலாம்.
வாக்களிப்பு நிலையத்தில் வாக்காளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் அதிகாரிகள் அனைவரும் முகக் கவசத்தை அணிந்திருக்கவேண்டும். வாக்காளரின் அடையாளத்தை தேர்தல் அதிகாரிகள் உறுதிசெய்யும்போது மட்டும் முகக் கவசத்தை அகற்ற அனுமதி உண்டு.
விடுதிகள் உட்பட குறிப்பிடப்பட்ட வசதிகளில் தங்கியுள்ள, வீட்டிலேயே தங்கி ஆணை பிறப்பிக்கப்பட்டோருக்கு சிறப்பு வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.
வாக்களிப்பு நாள் நெருங்கும் காலத்தில் கொவிட்-19 கிருமித் தொற்று நிலைமையின்படி பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் துறை நான்கு அதிகாரத்துவ மொழிகளிலும் வெவ்வேறு தகவல் தொடர்பு வழிகளில் வழங்கும்.