சிங்கப்பூரின் அடுத்த பொதுத் தேர்தலில் கட்டணம் செலுத்தப்பட்ட இணைய விளம்பரங்கள் குறித்து கடுமையாக்கப்படும் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்றவேண்டும் என்று தேர்தல் துறை நேற்று கூறியுள்ளது.
விளம்பரங்கள் எங்கு, எப்போது வெளிவரும் என்ற தகவல்களை ஆணையத்திடம் வழங்கவேண்டும் என்பது மாற்றங்களில் ஒன்று. விளம்பரங்களில் அவை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் குறிப்பிடவேண்டும் என்பதும் ஒரு மாற்றம்.
கட்டணம் செலுத்தி இணையத்தில் விளம்பரம் செய்யும் தகவலைத் தெளிவாகக் குறிப்பிடுவதால் தேர்தல் முறையின் நேர்மையைக் கட்டிக்காக்கமுடியும் என்று ஆணையம் தெரிவித்தது.
நாடாளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின்கீழ் துணை சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது குறித்தும் தேர்தல் அறிவிக்கப்பட்டால் வாக்களிப்பு நிலையத்தில் பாதுகாப்பான இடைவெளியைக் கடைப்பிடிப்பது குறித்தும் நேற்று செய்தியாளர்களிடம் தேர்தல் துறை அறிவித்தது.
தற்போதைய விதிமுறையின்படியே கட்டணம் செலுத்தியோ செலுத்தாமலோ விளம்பரம் செய்யும் அனைத்து இணையத் தளங்கள் குறித்த தகவல்களை தலைமை தேர்தல் அதிகாரியிடம் வேட்பாளர்கள் வழங்கவேண்டும்.
பிரசாரக் காலம் தொடங்கி 12 மணி நேரத்திற்குள் அந்தத் தகவல் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
நடுநிலையான, சீரான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்யும் பொறுப்பு பிரதமரால் நியமிக்கப்படும் தலைமை தேர்தல் அதிகாரிக்கு உண்டு.
புதிய விதிமுறைக்குக்கீழ் எந்தெந்த தளங்களில் விளம்பரம் செய்யப்படும் என்பதைத் தவிர்த்து அவை கட்டணம் செலுத்தப்பட்டு செய்யப்படுகின்றனவா என்ற தகவலை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரங்களாக இருக்குமெனில், எங்கு விளம்பரங்கள் வெளியிடப்படும், வெளியீட்டாளர் யார், எந்த நேரத்தில் விளம்பரங்கள் வெளி யீடு காணும், விளம்பரங்களைப் போட பணம் பெறப்பட்டதா போன்ற தகவல்களை வேட்பாளர்கள் வழங்கவேண்டும்.
வேட்பாளர், அரசியல் கட்சி, அங்கீகரிக்கப்பட்ட பிரசாரம் செய்பவர் என யார் கட்டணம் செலுத்தியுள்ளார் என்ற தகவல் தெளிவாக இருக்கவேண்டும்.
அங்கீகரிக்கப்படாதவர்கள் இணையத்தில் கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம் செய்யமுடியாது. இலவச விளம்பரங்களை அவர்கள் செய்யலாம்.
தேர்தல் செலவுகளைச் சமர்ப்பிக்கும்போது இணைய விளம்பரங்களுக்குச் செலவு செய்த தொகையை தெளிவாக வேட்பாளர்கள் சமர்ப்பிக்கவேண்டும் என்பதும் புதிய விதிமுறைகளில் ஒன்று.
விளம்பரப் பதாகைகளுக்கான விதிமுறைகளும் மாற்றப்பட்டுள்ளதாக தேர்தல் துறை நேற்று அறிவித்தது.
சட்டத்திற்குப் புறம்பாக உள்ள பதாகைகளை அகற்றுவதற்கான செலவை வேட்பாளர்கள் இனி ஏற்றுக்கொள்ளவேண்டும்.
ஏற்கெனவே இதற்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை, அபராதம் அல்லது சிறை தண்டனையைத் தாண்டி இந்தப் புதிய விதிமுறை விளங்கும்.
ஒவ்வொரு பதாகையை அகற்ற $50 செலுத்தவேண்டும். இந்தத் தொகை வேட்பாளரின் தேர்தல் செலவுத் தொகையில் சேர்க்கப்படும்.
பதாகைகளின் அளவுக்காக மூன்று உச்சவரம்புகள் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு 5,000 வாக்காளர்களுக்கு ஒரு பெரிய பதாகையை வைக்கலாம்.
தற்போது இரண்டு அளவு உச்சவரம்பு குறிக்கப்பட்டுள்ளது. 4,000 வாக்காளர்களுக்கு ஒரு பெரிய பதாகையை வேட்பாளர்கள் வைக்கலாம்.