நெருக்கடியைச் சமாளிக்க நம்மிடம் நிதி சேமிப்பும் மக்களும் ஆற்றலும் வலுவாக இருக்கவேண்டும் என்பதையே கொவிட்-19 கிருமித்தொற்று வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் தெரிவித்து இருக்கிறார்.
தன்னுடைய 40 ஆண்டுகால பொதுச் சேவையில் சிங்கப்பூர் இதுவரை காணாத ஆகப் பெரிய, மிகவும் சிக்கலான சவால் என்று கொரோனா கிருமித்தொற்றை வர்ணித்த திரு டியோ, இந்தத் தொற்றைச் சமாளித்து மீண்டு வரும்போது மிகவும் மீள்திறனுடன் கூடிய நாடாக சிங்கப்பூர் திகழ வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அமைதி காலத்தில் அடையாளம் தெரியாத மிரட்டல்களை எதிர்நோக்குவதற்குத் திட்டமிட வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது என்பதும் எப்போதுமே சேமிப்பையும் மக்களையும் ஆற்றலையும் வலுவாக்கி வரவேண்டிய தேவை இருக்கிறது என்பதும் தமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியவந்திருக்கும் பாடம் என்று திரு டியோ குறிப்பிட்டார்.
இப்படிப்பட்ட வளம் நம்மிடம் இருந்தால் நெருக்கடி ஏற்படும்போது உடனே செயல்பட்டு நீக்குப்போக்குடன் வேகமாக நாம் மீண்டு வர முடியும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19க்குப் பிந்தைய சிங்கப்பூரின் எதிர்காலம் பற்றி அமைச்சர்கள் ஆற்றி வரும் தேசிய உரையில் மூன்றாவது உரையாக நேற்று திரு டியோ பல கருத்துகளைத் தெரிவித்தார்.
பிரச்சினைகளைக் கையாளுவதற்கான சிங்கப்பூரின் ஆற்றல் உலகளவில் அதனுடைய நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வலியுறுத்திய மூத்த அமைச்சர், நாம் வலுவாக, வெற்றிகரமாக, ஐக்கியமாக இருந்தால்தான் நிச்சயமில்லாத உலகில் சொந்தமாக காலூன்றி நிற்க முடியும். வெளி சவால்களையும் சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.
கொவிட்-19 சிங்கப்பூரின் ஆற்றலுக்கும் உறுதிக்கும் விடப்பட்டு உள்ள கடுமையான சவால் என்று வர்ணித்த அவர், அதற்கு அளவிட முடியாத பதில் நடவடிக்கை தேவைப்படுவதாகக் கூறினார்.
“இந்த நெருக்கடி நம்முடைய வளங்களையும் ஆற்றல்களையும் விஞ்சிவிட்டது என்றாலும் இதில் வேகமாகச் செயல்பட நம்மால் முடிந்து இருக்கிறது.
“அலை அலையாகக் கிருமித்தொற்று ஏற்பட்ட போதெல்லாம் ஒவ்வோர் அலையையும் சமாளிக்க புதுப்புது நடவடிக்கைகளை அமல்படுத்தி கிருமிப் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தது,’’ என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரர்களின் ஆதரவு காரணமாக சமூகத்தில் தொற்று குறைந்து இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர்களிடையே கொரோனா கிருமித்தொற்று நிலைப்படுத்தப்பட்டு இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ, சிங்கப்பூர் மீள்திறனின் மூன்று அம்சங்களைக் கோடிகாட்டினார்.
நெருக்கடியைச் சமாளிப்பதில் மீள்திறன், பொருளியல் மீள்திறன், சமூக மீள்திறன் ஆகியவை அந்த மூன்று அம்சங்கள் என்று மூத்த அமைச்சர் தெரிவித்தார்.
நெருக்கடியைச் சமாளிக்க செயல்படும் விதத்தைப் பொறுத்தவரையில் சிங்கப்பூர் தன்னுடைய ஆற்றல்களை அதிகப்படுத்தி நோயாளிகளை வேகமாகக் கவனிக்க வேண்டி இருந்தது.
இதில் அது தன் மக்கள் வளத்தையும் ஆற்றல்களையும் பயன்படுத்திக் கொண்டது என்று அவர் விளக்கினார்.
வெளிநாட்டு நோயாளிகளிடையே கிருமி தொற்றியது பெரிய சவாலாக இருந்தது என்பதை சுட்டிய அவர், சார்ஸ் கிருமியின்போது பெற்ற அனுபவத்தைப் பயன்படுத்திக்கொண்டு விடுதிகளில் கண்காணிப்புகளையும் முன்னெச்சரிக்கைகளையும் அரசாங்கம் வேகப்படுத்தியது.
இருந்தாலும் அவை எல்லாம் போதவில்லை. கொரோனா சார்ஸ்கிருமியைவிட வேகமாகத் தொற்றியதே இதற்குக் காரணம்.
ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி விடுதிகளில் கிருமி தொற்றியவர்களின் எண்ணிக்கை 26 ஆக இருந்தது. ஆனால் ஏப்ரல் 20ல் அந்த எண்ணிக்கை 1,000ஐ கடந்துவிட்டது.
அரசாங்கம் மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த மனிதவளத்தையும் வளங்களையும் திரட்ட வேண்டிய தேவை இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பொருளியல் மீள்திறனைப் பற்றி விளக்கிய அவர், கிருமி காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. பொருள் விநியோகச் சங்கிலி பாதிப்புக்கு உள்ளானது.
நம்மிடம் அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு இருந்ததால் நிலைமையைச் சமாளிக்க முடிந்தது என்று கூறினார்.
நான்கு வரவுசெலவுத் திட்டங்களையும் அரசாங்கம் தாக்கல் செய்தது. கடந்த கால இருப்பில் இருந்து $52 பில்லியனைப் பயன்படுத்த முடிவு செய்தது.
1967ஐ விட இப்போது அதிக மீள்திறனுடன் நாம் இருக்கிறோம் என்று திரு டியோ தெரிவித்தார்.
புதிய சந்தைகளையும் தொழில்களையும் வேலைகளையும் உருவாக்குவதற்குத் தோதான நல்ல நிலையில் நாம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமூக மீள்திறனைப் பற்றி விளக்கிய மூத்த அமைச்சர், சிங்கப்பூரர்கள் இனம், மொழி பாராமல் உதவி தேவைப்படுவோரிடம் கருணையுடன், அன்புடன், சேவை மனப்பான்மையுடன் நடந்துகொண்டதைக் காண்பது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார்.