கொவிட்-19 நோய்ப் பரவலை அடுத்து புதிதாக ஏற்படுத்தப்பட்ட $500,000 நிதி மூலம் புதிதாகப் பட்டம் பெற்ற, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 1,000 பட்டதாரிகள் பயன்பெறவிருக்கின்றனர்.
தென்மேற்கு சமூக மேம்பாட்டு மன்றமும் கோ கோக் லியோங் என்டர்பிரைஸ் நிறுவனமும் ‘நோபீ’’ எனும் நுண்கற்றல் தளத்துடன் இணைந்து இந்த நிதியை ஏற்படுத்தி இருக்கின்றன.
தகுதிபெறும் பட்டதாரிகள் ‘நோபீலேன்’ இணையத்தளத்தில் தங்களுக்கு விருப்பப்பட்ட பாடப்பிரிவை எடுத்துப் படிக்கலாம். தங்களது வேலைத்தகுதியை உயர்த்திக்கொள்ள உதவும் வடிவமைப்புச் சிந்தனை, தொழில்முனைவுத்திறன் போன்ற முக்கிய திறன்களை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும் விதத்தில் அந்தப் பாடப்பிரிவுகள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
தாங்கள் தேர்வு செய்த பாடப்பிரிவைக் கற்று முடித்ததும் அவர்களுக்கு $500 மானியத்தொகையும் வழங்கப்படும்.
தென்மேற்கு வட்டாரத்தைச் சேர்ந்த, 2019 டிசம்பருக்கும் 2020 டிசம்பருக்கும் இடையே பட்டம் பெற்றோர் அல்லது பெறுவோர் இந்தத் திட்டத்திற்குத் தகுதிபெறுவர். அத்துடன், அவர்களது குடும்பத்தின் மொத்த மாத வருமானம் $3,500 அல்லது தலைக்கணக்கு வருமானம் $875க்குக் குறைவாக இருக்க வேண்டும்.
இந்தத் திட்டம் பற்றிய விவரங்களையும் விண்ணப்பப் படிவத்தையும் https://form.gov.sg/#!/ 5eb51ad1b278d7001185e910 என்ற இணையப் பக்கத்தில் காணலாம்.