பாட்டாளிக் கட்சி இன்று தேர்தல் அறிக்கையையும் தேர்தல் முழக்கவரியையும் வெளியிட்டது. ‘உங்கள் வாக்கு பலன் தரட்டும்’ என்பது பாட்டாளிக் கட்சியின் முழக்கவரி. கட்சியின் தலைவர் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் இன்று தேர்தல் அறிக்கையையும் முழக்கவரியையும் வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தில் மக்கள் செயல் கட்சி கொண்டுள்ள அபரிமிதமான பெரும்பான்மையைச் சரிப்படுத்துவதில் ஒருமித்த கவனம் செலுத்த பாட்டாளிக் கட்சி விரும்புவதாக அவர் கூறினார். ஜூலை 10ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் எதிர்த்தரப்பு வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படாமல் போய்விடும் ஆபத்து உண்மையிலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்குச் சேவையாற்றும் வகையில் பட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் நம்முடைய ஜனநாயகத்தையும் அரசியல் நடைமுறைகளையும் பலப்படுத்துவார்கள் என்று திரு சிங் தெரிவித்தார். வேறு யாராவது பாட்டாளிக் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று இருந்து விடாதீர்கள் என்றார் அவர். கட்சியின் தேர்தல் அறிக்கை நான்கு கருப்பொருளின் அடிப்படையில் சிங்கப்பூருக்கான இலக்கை நிர்ணயிக்கிறது.
சிங்கப்பூரர்களின் கனவு நனவாக உதவ தேவைப்படும் சமூக, கல்விக் கொள்கைகள்; ஊழியர்களுக்கு கண்ணியமான வேலைகள், வாழ்க்கைச் செலவு பிரச்சினைகளைச் சமாளித்து அதன்மூலம் நாம் விரும்பும் ஒரு நாட்டைப் பலப்படுத்துவது; துடிப்புமிக்க அரசியல், ஆளுமை மற்றும் தற்காப்பு அமைப்புகளை உருவாக்குவது ஆகியவை அந்த நான்கு கருப்பொருள் என்று தேர்தல் அறிக்கை குறிப்பிடுகிறது. அந்த 48 பக்க தேர்தல் அறிக்கையில் எட்டு பக்கங்கள் கொவிட்-19 நெருக்கடி தொடர்பானவை.
இதனிடையே , பாட்டாளிக் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் லோ தியா கியாங் , 63, இன்று ஹவ்காங் தொகுதிக்குச் சென்று வாக்காளர்களைச் சந்தித்தார். திரு லோ, ஏப்ரல் மாதம் தன் வீட்டில் கீழே விழுந்துவிட்டார். அதற்குப் பிறகு முதன்முதலாக அவர் இன்று ஹவ்–காங் தொகுதியில் காணப்பட்டார்.
தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர் டெனிஸ் டான், 49, திரு லோவுடன் தொகுதி உலா மே ற்கொண்டார். வரும் தேர்தலில் ஹவ்காங் தனித்தொகுதியில் தன் வேட்பாளராக டெனிஸ் டானை களமிறக்கப்போவதாக பாட்டாளிக் கட்சி தெரிவித்து உள்ளது.
இவ்வேளையில், தன்னுடைய வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் செய்தியாளர்கள் மாநாட்டில் சனிக்கிழமையன்று பேசிய திரு பிரித்தம் சிங், தன்னுடைய வேட்பாளர்கள் யார் யார் எங்கெங்கே போட்டியிடுகிறார்கள் என்பதை வேட்புமனுத்தாக்கல் நாளன்றுதான் பாட்டாளிக் கட்சி அறிவிக்கும் என்றார்.
பாட்டாளிக் கட்சி 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.