நாடாளுமன்றம் அடுத்த மாதம் மீண்டும் கூடும்போது, எதிர்க்கட்சித் தலைவர் என்று அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள திரு பிரித்தம் சிங், அடுத்த ஐந்து ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பாட்டாளிக் கட்சியின் அணுகுமுறை குறித்தும் பொதுமக்கள் என்ன எதிர்பார்க்கலாம் என்பது குறித்தும் விவரிக்க உள்ளதாக நேற்று கூறினார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியின் முயற்சிகளுக்கு ஆதரவாக ஊழியர்களையும் வசதிகளையும் வழங்குவது தொடர்பில் தாம் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் தொகுதியில்லா நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, சிங்கப்பூரின் அரசியல் வரலாற்றில் அதிகாரபூர்வமாக உருவாக்கப்பட்ட புதியதொரு பொறுப்பு என்று திரு சிங் குறிப்பிட்டார். இதன்படி நாடாளுமன்றம் தொடர்பான குறிப்பிட்ட சில சலுகைகளைப் பெறுவார். நாடாளுமன்ற விவாதங்களில் முதலில் கருத்துரைக்கும் சலுகை இவருக்கு வழங்கப்படும். தற்போது நடப்பில் உள்ள விவாத மரபுகளுக்கு உட்பட்டு கொள்கைகள், மசோதாக்கள், தீர்மானங்கள் போன்றவற்றின் தொடர்பில் முதல் கேள்வியைக் கேட்கும் உரிமையை திரு பிரித்தம் பெற்றிருப்பதாக நாடாளுமன்ற நாயகர் மற்றும் அவைத் தலைவர் அலுவலகங்கள் நேற்று கூட்டறிக்கை வழி தெரிவித்தன.
அல்ஜுனிட் குழுத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திரு சிங்குக்குத் தரப்பட்டுள்ள புதிய பதவிக்கான பொறுப்புகள், நாடாளுமன்றச் சலுகைகள் மற்றும் வசதிகள் குறித்து அக்கூட்டறிக்கை விவரித்திருந்தது.
இதன் தொடர்பில் பிரதமர் லீ சியன் லூங் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று நாடாளுமன்றம் துவங்கும்போது 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். பாட்டாளிக் கட்சியின் 10 உறுப்பினர்களும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் 2 உறுப்பினர்களும் இதில் அடங்குவர்.
மேலும் அதிக ஆக்ககரமான விவாதங்களுடன் கொள்கை தொடர்பில் பயனுள்ள மாற்றுத் திட்டங்களை எதிர்க்கட்சியிடமிருந்து தாம் எதிர்பார்ப்பதாக பிரதமர் லீ குறிப்பிட்டார். மேம்பட்ட, வலுவான சிங்கப்பூரை உருவாக்க அனைவருடன் பணியாற்றுவதற்கு ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பதாகவும் திரு லீ குறிப்பிட்டார்.