சிங்கப்பூரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக தயார்நிலை தேசிய சேவையாளர்கள் இம்மாதம் முதல் மீண்டும் சேவைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். கொவிட்-19 நோய்ப்பரவல் காரணமாக மார்ச் 31ஆம் தேதியிலிருந்து ராணுவ முகாம்களைச் சார்ந்த அத்தியாவசியமற்ற பயிற்சிகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
735வது காவலர் படைப்பிரிவைச் சேர்ந்த 580 தயார்நிலை தேசிய சேவையாளர்கள் மீண்டும் பயிற்சிக் குத் திரும்பினர். அவர்களில் கிட்டத்தட்ட 440 பேர் ஜூரோங் தீவிலுள்ள முக்கியமான ராணுவத் தளங்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் துணைப் பொறுப்புகளில் பணியாற்றினர்.
தேசிய சேவையாளர்கள் இரு வார ராணுவப் பயிற்சிக்கு இரண்டு பிரிவுகளாகச் சென்றனர். முதல் பிரிவினர் ஜூலை மாத முதல் பாதியிலும் இரண்டாவது பிரிவினர் இரண்டாவது பாதியிலும் பயிற்சியைத் தொடங்கினர்.
இந்தச் சேவையாளர்கள் முறையே தங்களுக்குரிய இடங்களுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னர் தேடி கைது செய்வது, பகைவர்களை எதிர்கொள்வது, துப்பாக்கி சுடுவது போன்றவற்றில் மறுபயிற்சியைப் பெற்றனர்.
ஒருநாளில் இருமுறை வெப்பநிலையை அளவிடுவது, ராணுவ முகாமுக்குள் நுழையும்போது சுகா தார மற்றும் பயண விவரங்களைப் பதிவது உள்ளிட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பல்வேறு நடவடிக் கைகள் ராணுவப் பயிற்சியின்போது செயல்படுத்தப்பட்டன.
படைவீரர்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க, பயிற்சிகள் வெவ்வேறு நேரங்களில் பிரிவுகளாக நடத்தப்பட்டதாக 735 காவலர் படைப்பிரிவு சர்ஜென்ட் மேஜரான மூன்றாம் வாரண்ட் அதிகாரி ஜேக்கப் லிம், 31, கூறினார்.
ஜூரோங் தீவுக்கு அனுப்பப்பட்ட தேசிய சேவையாளர்களும் பணியில் இருக்கிறார்களா அல்லது பாதுகாப்பு சம்பவங்களுக்காக தயார்நிலையில் காத்திருக்கிறார்களா என் பதைப் பொறுத்து வெவ்வேறு குழுக் களாகப் பிரிக்கப்பட்டிருந்தனர்.
ஜுரோங் தீவில் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட தேசிய சேவையாளர்களுக்கு பணியில் ஈடுபடுத்தப்படுவதற்கு முன்னர் கொவிட்-19 கிருமி சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் படைப்பிரிவின் தலைவரான லெப்டினன்ட்-கர்னல் (என்எஸ்) மார்க் சியூ, நடப்பில் இருந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடைமுறைகள், சேவையாளர்கள் நள்ளிரவில் கழிவறைக்குப் போகும்போது முகக்கவசம் அணிந்து சென்றது உட்பட பல்வேறு மறக்கமுடியாத சம்பவங்களைத் தந்தன என்றார். முகக்கவசம் அணியும் பழக்கம் அவர்களுக்குள் ஊறிவிட்டது,” என்றார் அவர்.
ஜூலை இரண்டாம் பாதியில் பயிற்சியில் கலந்து கொண்ட 31 வயதான முதல் வகுப்பு கார்ப்பரல் (என்எஸ்) முரளிதரன் கலைவாணன் (படம்), தானும் தமது சக சேவையார்களும் தயார்நிலை பணிகளுக்குத் திரும்புவதை எதிர்பார்த்திருந்ததாகக் கூறினார்.
“ஆண்டிற்கு ஒருமுறைதான் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒன்றாகப் பயிற்சி பெறுகிறோம்,” என்று அவர் கூறினார்.