இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பில் ஹெலிகாப்டர்கள் தேசிய கொடியை ஏந்தி பறந்து செல்வதை சிங்கப்பூரர்கள் வீட்டிலிருந்தபடியே பார்க்கலாம்.
தரையிலிருந்து 1,000 அடி உயரத்தில் இரு ‘சினுக்’ ஹெலிகாப்டர்கள் ஒவ்வொன்றும் சிங்கப்பூர் கொடியை ஏந்திச் செல்லும். தீவின் கிழக்கு, மேற்குப் பகுதி என இரு வேறு பாதைகளில் அவை பறந்து செல்லும்.
Fly Our Flag எனும் இந்த அங்கத்தில் ஒவ்வொரு ஹெலிகாப்டருக்குப் பின்னால் இரு ‘அப்பாச்சி’ ஹெலிகாப்டர்கள் பறக்கும்.
கிழக்குப் பாதையில் பிடோக், பாசிர் ரிஸ், பொங்கோல் போன்ற வீடமைப்புப் பேட்டைகளையும் மேற்குப் பாதையில் அங் மோ கியோ, ஜூரோங் ஈஸ்ட், சுவா சூ காங் போன்ற பகுதிகளையும் ஹெலிகாப்டர்கள் கடந்துசெல்லும்.
இரு பாதைகளும் சிங்கப்பூரின் தெற்குப் பகுதியிலிருந்து தொடங்கி வடக்கில் உள்ள செம்பவாங் விமானப் படைத் தளத்தில் முடிவடையும். காலை 10.30 மணிக்குத் தொடங்கும் ஹெலிகாப்டர் பயணம், 55 நிமிடங்கள் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற தேசிய தின அணிவகுப்புகளின்போது, தேசிய கொடியை ஹெலிகாப்டர்கள் ஏந்திச்செல்லும் அங்கம், மரினா பே மிதக்கும் மேடை போன்ற ஒரே இடத்தில் இடம்பெற்றது. அந்த அங்கம் 10 நிமிடங்கள் மட்டுமே நீடித்தது.
இவ்வாண்டு தேசிய தின அணிவகுப்பு காலை, மாலை என இரு வேளைகளாகப் பிரிக்கப்படும். வான்குடை வீரர்களின் சாகச நிகழ்வு போன்ற அம்சங்கள் தீவு முழுவதும் பல்வேறு இடங்களில் இடம்பெறும்.
ஆகஸ்ட் 9ஆம் தேதி காலை வேளையில் பிரதமர் லீ சியன் லூங்கின் தேசிய தினச் செய்தி ஒளிபரப்பப்படும். பாடாங்கில் நடைபெறும் அணிவகுப்பை அதிபர் ஹலிமா யாக்கோப் பார்வையிடுவார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழலில் தங்களால் ஆன அனைத்தையும் செய்து வரும் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக, ஆறு ‘எஃப்-15’ ரக போர் விமானங்கள் வானில் சீறிப் பறந்துசெல்லும்.
Roar Of Unity எனப்படும் இந்த 30 நிமிட அங்கத்தை சிங்கப்பூரர்கள் தங்களது வீடுகளில் இருந்தவாறே பார்க்க முடியும். காலை 10.45 மணிக்கு பாடாங்கில் விமான சாகச நிகழ்வு நடைபெறும்.
அதன் பின்னர் டான் டோக் செங் மருத்துவமனை, செங்காங் பொது மருத்துவமனை, சாங்கி பொது மருத்துவமனை, கூ டெக் புவாட் மருத்துவமனை, இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனை, தேசிய பல்கலைக்கழக மருத்துவமனை, அலெக்ஸாண்ட்ரா மருத்துவமனை, சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகிய எட்டு மருத்துவமனைகளை அந்த போர் விமானங்கள் கடந்துசெல்லும்.
அதன் பிறகு குடியிருப்புப் பகுதிகளை அவை கடந்து சென்றவுடன் காலை 11.15 மணியளவில் பாய லேபார் விமானப் படைத் தளத்தில் பயணத்தை முடிக்கும்.
மாலை நேர நிகழ்ச்சி போனா விஸ்தா, தி ஸ்டார் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ் சென்டரில் நடைபெறும். சிங்கப்பூரர்களின் படைப்புகள் அங்கு அரங்கேறும். இறுதி அங்கமாக, தீவின் 10 இடங்களில் வாணவேடிக்கை இடம்பெறும். அனைத்து அங்கங்களும் தொலைக்காட்சியிலும் இணையத் தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பாகும்.