சிங்கப்பூரில் புதிதாக அமையவிருக்கும் தெங்கா குடியிருப்புப் பகுதியில் சுமார் 20 விழுக்காட்டு இடம் பசுமைப் பகுதியாக இருக்கும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அறிவித்து இருக்கிறது.
அங்கு அமையும் புதிய ‘பார்க்’ என்ற வட்டாரத்தில் ஊசியிலைக்காட்டை கருப்பொருளாகக் கொண்ட சிறார் விளையாட்டு திடல்கள், மத்திய பூங்கா என்று வர்ணிக்கப்படும் பசுமை பகுதி, 1.5 கி.மீ. நீள ஊசியிலைக்காட்டுப் பாதை ஆகிய பலவும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
இந்தப் பாதை அங்கு இடம்பெறும் பல்வேறு குடியிருப்பு புளோக்குகளை இணைக்கும்.
சிங்கப்பூரின் ஆகப் புதிய குடியிருப்புப் பேட்டையாக தெங்கா உருவாகிறது. அந்தப் பேட்டையில் ஐந்து வட்டாரங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டு இருக்கிறது. அவற்றில் ‘பார்க்’ என்பது மூன்றாவது வட்டாரமாகும்.
பெயரே ‘பார்க்’ (பூங்கா) என்று இருப்பதால் இப்பகுதியில் பசுமை மண்டியிருக்கும். மக்களுக்குப் பூங்கா போன்ற சூழலை இது உருவாக்கித் தரும். நகர மையத்தையும் இதர பகுதிகளையும் இந்தப் பார்க் வட்டாரம் மிகவும் வசதியாக இணைக்கும்.
700 ஹெக்டர் பரப்பளவில் அமையும் தெங்கா காட்டு நகர்ப் பகுதி ஏறக்குறைய பீஷான் அளவுக்குப் பரந்து இருக்கும்.
தெங்காவில் சுமார் 20 விழுக்காட்டுப் பகுதி பசுமைக்காக ஒதுக்கப்படும். தெங்காவில் உருவாக்கப்படும் ஐந்து வட்டாரங்களும் மக்கள் இயற்கையோடு ஒன்றி வசிக்கும் வகையில் வடிவமைக்கப்படும்.
மக்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வை அந்த வடிவமைப்புகள் மேம்படுத்தும். சிறந்த உடல்நலத்தையும் பசுமைச் சூழலையும் அந்த வட்டாரம் பலப்படுத்தும் என்று கழகம் குறிப்பிட்டு இருக்கிறது.
பார்க் வட்டாரம் சுமார் 104 ஹெக்டர் பரப்பளவில் இருக்கும். அங்குதான் கார்கள் இல்லாத தெங்கா நகர மையம் அமையும். தெங்காவின் பசுமை மையமாகத் திகழவிருக்கின்ற ‘மத்திய பூங்காவில்’ தாவர வளம் மண்டியிருக்கும்.
அங்கு காட்டு நீரோடை ஒன்றும் அமையும். சுற்றுச்சூழல் தொடர்புகளைப் பலப்படுத்தும் வகையில் பூங்காக்களையும் பசுமை இடங்களையும் உருவாக்கும் நோக்கத்தில் இந்தக் கழகம் தேசிய பூங்கா கழகத்துடன் சேர்ந்து செயல்பட்டு வருகிறது.
புதிய 1.5 கி.மீ. நீள ஊசியிலைக்காட்டுப் பாதை பல்வேறு புளோக்குகளையும் இணைக்கும். மக்கள் அதன் வழியாக மத்திய பூங்கா பகுதிக்குச் செல்லலாம்.
தெங்கா நகரை சுற்றிலும் அமையும் 15 மீ. முதல் 20 மீ. வரை அகலம் உள்ள காட்டுப் பகுதியையும் அவர்கள் அந்த வழி மூலம் எட்டலாம். இந்தப் பாதை நெடுகிலும் சிறார் விளையாட்டுத் திடல்கள், உடலுறுதி நிலையங்கள், திறந்தவெளி பசுமை இடங்கள், மக்கள் அமர்ந்து பொழுதுபோக்கும் இடங்களும் இருக்கும். இந்தப் பாதைக்கு இணையாக 100 மீ. அகலம், 5 கி.மீ. நீளம் உள்ள காட்டுப் பாதை ஒன்றும் செல்லும்.
அது தெங்காவை பக்கத்தில் உள்ள மேற்கு மற்றும் மத்திய நீர்த்தேக்கப் பகுதிகளுக்கு இடைப்பட்ட பசுமை கட்டமைப்புடன் இணைக்கும். தாவரம் மற்றும் தோட்டப் பண்ணைகளுக்கான ஏற்பாடும் இருக்கின்றன. இவை தெங்காவின் இதர இரண்டு வட்டாரங்களின் விரிவாக்கங்களாக அமையும்.
அந்தப் பண்ணைகள் சராசரியாக 600 மீ. நீளமும் 40 மீ. அகலமும் இருக்கும். இவை ‘பார்க்’ வட்டாரம் ஊடே அமைந்திருக்கும்.