சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேரடி மக்கள் சந்திப்புக் கூட்டங்கள் நேற்றிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. எனினும், இது மொத்தம் 50 பேர் அல்லது அதற்கும் குறைவான பேர்கள் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது.
ெகாரோனா கிருமிப் பரவல் நடவடிக்கைகளுக்குப் பிறகு இரண்டாம் கட்ட தளர்வு நடவடிக்கைகள் அமலில் உள்ள நிலையில், தற்பொழுது நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களைச் சந்திக்க விரும்பும் தொகுதி மக்களுக்கும் வசதி ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடன் இது அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாரியம் கூறுகிறது.
ஒவ்வொரு மக்கள் சந்திப்பு கூட்டத்திலும் எத்தனை பேர் அனுமதிக்கப்படுவர் என்பது அந்ததந்த தொகுதி மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நடைபெறும் இடத்தின் அளவைப் பொறுத்தது என்று வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருப்போர், அதாவது தொகுதி உறுப்பினர்கள், ஆர்வலர்கள், குடியிருப்பாளர்கள் ஆகியோருடன் காத்திருப்பு பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினரை சந்திக்கக் காத்திருப்போரும் அடக்கம்.
இது பற்றிக் கருத்துரைத்த மக்கள் செயல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மாற்றம் குறித்து தங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதைத் தொடர்ந்து கூடுதலாக சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் கூறினர். வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான திருவாட்டி ஃபூ மீ ஹார் தமது தொகுதி பற்றிக் கூறுகையில், தம்மை சந்திக்கக் காத்திருப்பவர்கள் வரிசை பிடித்து நிற்க ஏதுவாக புளோக்கின் வெற்றித் தளம் பயன்படுத்தப்படும் என்று கூறுகிறார். அத்துடன் தமது கிளையில் நாடாளுமன்ற உறுப்பினர், தொண்டூழியர்கள் உள்பட, 30 பேர் அனுமதிக்கப்படுவர் என்று தெளிவுபடுத்துகிறார்.
“புளோக் 32 தேபான் கார்டன்ஸ் மக்கள் சந்திப்புக் கூட்டங்களைப் பொறுத்தவரை, இடவசதி இருப்பதை பொறுத்து, நாங்கள் வெளிப்புற மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்துவோம். இது இந்த ஆண்டு மார்ச் மாதம் அமலான கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டத்துக்கு முன்னரே அறிமுகமான ஒன்று.
“இங்கு நாங்கள் பாதுகாப்பான இடைவெளி தூரம், பிளாஸ்டிக் முகக்கேடயம், பாதுகாப்பு நுழைவு வருகைப் பதிவு, உடல் வெப்பநிலை சோதனை ஆகியவற்றுடன் சுகாதார பாதுகாப்பு உறுதிமொழியையும் அமல் செய்வோம்.
“வீட்டில் தனிமையில் தங்கும்படி உத்தரவில் உள்ளோர், தனிமையில் தங்க உத்தரவிடப்பட்டோர், நோய்வாய்ப்பட்டிருப்போர் ஆகியோரை வீட்டுக்குச் செல்லும்படி கூறுவோம்,” என்று சொன்னார்.
இந்நிலையில், பாட்டாளிக் கட்சி உறுப்பினர் ஜெரால்ட் கியாம், தமது மக்கள் சந்திப்பு கூட்டங்கள் நாளை, ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல், தொடங்கும் என சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
தமது மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தும் சுமார் 15 தொண்டூழியர்கள் கொண்ட குழு குடியிருப்பாளர்களின் பாதுகாப்பு கருதி முகக்கேடயங்களை அணிந்திருப்பர் என்று தெரி வித்துள்ளார்.
இதில் ஓர் அம்சமாக, குடியிருப்பாளர்கள் தங்கள் வருகையை பதிவு செய்த பின்னர் தங்கள் வீட்டுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். பின்னர் வரிசையில் அவர்களின் சந்திப்பு நேரம் நெருங்கும் சமயம் அவர்களுக்கு கைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மூத்த குடியிருப்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று விளக்கினார்.
குடியிருப்பாளர்கள் தம்மை வாரந்தோறும் தொடர்பு கொள்ளும் வண்ணம் அவர்களிடம் தமது தொலைபேசி எண், வாட்ஸ்அப் தொடர்பு எண் போன்றவற்றைத் தந்துள்ளபோதும் அவர்களை நேரடியாக சந்திப்பதையே எதிர்பார்த்துக் காத்திருப்பதாக இவர் கூறுகிறார்.
“மின்னிலக்க தொடர்பு முறைகள் மூலம் உதவி கேட்டு எனக்கு பலரிடமிருந்து கோரிக்கை வருவது ஒருபுறமிருக்க, இது மற்ற பலருக்கு சங்கடமாக இருக்கும் என்றும் அதனால் அவர்கள் என்னை நேரடியாக சந்திக்க விரும்புவர் என்பதையும் நான் அறிவேன்.
“இதுபோன்ற குடியிருப்பாளர்களுக்கு அவர்களுக்கு தேைவப்படும் உதவி கிடைக்காமல் போகக்கூடும் என்பதே எனது கவலை.
“அதனால்தான் அவர்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்,” என்று தெரிவிக்கிறார்.
இதற்கிடையே, மக்கள் செயல் கட்சி பேச்சாளர் ஒருவர், “சாத்தியப் படும்போது எல்லாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் மக்கள் சந்திப்பு கூட்டங்களை கைபேசி வழியாகவோ, இணையம் மூலமோ அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடர்ந்து நடத்தலாம்,” என்று கூறியுள்ளார்.