சைக்கிள் ஓட்டுவது ஆரோக்கியமான வாழ்க்கைபாணி என்று நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் தலைமை நிர்வாகி லிம் எங் ஹுவீ தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் போன்ற சிறிய, மக்கள் பெருக்கம் நிறைந்த நாடுகளில் மோட்டார் வாகனப் போக்குவரத்து என்பது ஒரு வரையறைக்குள் இருக்கும். மோட்டார் வாகனத்தை நம்பி இராமல் நாமே சைக்கிளை மிதித்துச் செல்வது ஆரோக்கியமான பயணம் என்று அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
கொவிட்-19 நோய்ப் பரவல் சூழல் காரணமாக தற்போது இல்லத்தில் இருந்து தாம் பணிபுரிவதாகக் கூறிய அவர், கடந்த ஆண்டில் அவ்வப்போது மேக்ஸ்வெல் ரோட்டில் உள்ள ஆணைய அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்றதாகத் தெரிவித்தார்.
நகரத் திட்டமிடுதல் தலைமை அதிகாரியாக இருந்தபோது ஈஸ்ட் கோஸ்ட் பகுதியில் உள்ள தமது வீட்டில் இருந்து வாரம் இருமுறை அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்றதாக திரு லிம், 55, கூறினார்.
முடியும்போதெல்லாம் சைக்கிளில் வேலைக்குச் சென்றுவர தமது சக ஊழியர்களை அவர் ஊக்குவிக்கிறார்.
“சைக்கிளில் செல்வது என்பது மிகவும் கட்டுப்படியாகக்கூடிய பயணம். சிங்கப்பூரில் பெரும்பாலானவர்கள் ஐந்து கிலோ மீட்டருக்கு உட்பட்ட பயணத்தையே மேற்கொள்கிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. இந்த தூரத்ைத சைக்கிளில் எளிதாக அடைந்துவிட முடியும்,” என்று அவர் சொன்னார்.
சிங்கப்பூரின் சைக்கிள் பாதை கட்டமைப்புத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் மேலும் அதிகமானவர்கள் சைக்கிள் ஓட்டுவதற்குத் தூண்டப்படுவார்கள் என்றார் அவர்.
சைக்கிள் பாதைகளையும் பூங்கா இணைப்புகளையும் 2030ஆம் ஆண்டுக்குள் அமைத்துவிட வேண்டும் என்பது ஆக அண்மைய இலக்கு. திட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் சுமார் 1,320 கிலோ மீட்டர் தூர சைக்கிள் பாதை அமையும். அது தற்போது உள்ள கட்டமைப்பு நீளத்தைக் காட்டிலும் மூன்று மடங்கு பெரிதாக இருக்கும் என்று திரு லிம் தெரிவித்தார்.
“சிங்கப்பூரின் உள்கட்டமைப்பு பாதுகாப்பானது என்பதால் சைக்கிள் பயணத்தை ஒரு வாய்ப்பாக மக்கள் எடுத்துக்கொள்ளலாம். ஓய்வுநேரப் பயிற்சியில் இருந்து அதனைத் தொடங்கலாம்,” என்று அவர் யோசனை கூறியுள்ளார்.