இம்மாதம் 29ஆம் தேதி முதல் வாரயிறுதி நாட்களில் லக்கி பிளாசா, பெனின்சுலா பிளாசா ஆகிய கடைத்தொகுதிகளுக்குச் செல்வோர் தங்கள் அடையாள அட்டை அல்லது வேலை அனுமதி அட்டை ஆகியவற்றில் உள்ள கடைசி இலக்கத்தைப் பொறுத்து உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அங்கு கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் அடையாள அட்டையின் கடைசி இலக்கமும் தேதியும் ஒற்றைப்படை எண்ணாக இருந்தால் அனுமதி உண்டு. அதேபோல், அடையாள அட்டையின் கடைசி இலக்கமும் தேதியும் இரட்டைப்படை எண்ணாக இருந்தால் அனுமதிக்கப்படும்.
இதன் தொடர்பான மேல் விவரங்களை சிங்கப்பூர் பயணத்துறைக் கழகமும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் விரைவில் வெளியிடும்.
வாரயிறுதியில் இவ்விரு கடைத்தொகுதிகளிலும் நுழைவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர் என்றும் இந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தவே புதிய விதி அறிமுகப்படுத்தப்படுகிறது என்று சுகாதார அமைச்சர் மான் கிம் யோங் நேற்று நடைபெற்ற மெய்நிகர் அமைச்சர்நிலை பணிக்குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
“சிங்கப்பூரின் நான்கு பிரபலமான ஈரச்சந்தைகளில் அண்மையில் மேற்கொள்ளப்பட்டதைப் போன்று இப்போது இவ்விரு கடைத்தொகுதிகளில் புதிய விதி நடைமுறைப்படுத்தப்படும்,” என்றும் பணிக்குழுவின் இணைத் தலைவரு மான திரு கான் விளக்கினார்.
அதே செய்தியாளர் கூட்டத்தில் பேசிய கல்வி அமைச்சரும் பணிக்குழுவின் மற்றோர் இணைத் தலைவருமான லாரன்ஸ் வோங், உணவகங்களில் ஒலிக்கும் இசை மிகவும் உரக்கமாக உள்ளது என்றும் அதனால் அங்குள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் குரலை உயர்த்திப் பேச வற்புறுத்தப்படுகின்றனர் என்றும் கூறினார்.
“மக்கள் உரத்த குரலில் பேசுவதால் அவர்கள் வாயிலிருந்து வெளியாகும் எச்சில்துளிகள் கிருமித்தொற்றைப் பரப்பலாம். ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா உணவகங்களிலும் ஒலிக்கும் இசை மெதுவான பின்னணி இசையாகத்தான் ஒலிக்க வேண்டும்.
“தொலைக்காட்சி, வானொலியில் இடம்பெறும் நேரடியாக ஒலிக்கும் இசையும் நேரடி காணொளி ஒளிபரப்புகளும் இனிமேல் அனுமதிக்கப்படாது,” என்றும் திரு வோங் விவரித்தார்.
மேலும் பேசிய திரு வோங், “ஓர் உணவகத்தில் தங்களின் குடும்ப உறுப்பினர்களும் நண்பர்களும் அதிக அளவில் கூடுவதற்கு ஏதுவாக அதிக மேசைகளை முன் பதிவு செய்கின்றனர்.
“இவ்வாறு பெரிய எண்ணிக்கையிலான மக்கள் ஓர் உணவகத்தில் கூடுவதற்கு அதிகமான மேசைகளை முன்பதிவு செய்வது இனி அனுமதிக்கப்படாது. இவ்வாறு முன்பதிவு செய்யப்படுவதை உணவு, பானக் கூட நடத்துநர்கள் அனுமதிக்கக்கூடாது.
“ஒரு குடும்பத்தைச் சேர்ந்து ஐந்துக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் ஒரே இடத்தில் உணவுண்பதற்கு அனுமதி உண்டு. ஆனால் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை,” என்றும் திரு வோங் விளக்கினார்.
உணவு, பானக் கூடங்களில் கொண்டாட்டங்களிலும் விருந்துகளிலும் மக்கள் ஒன்றுகூட அனுமதிக்கப்படமாட்டார்கள். அவ்வாறு கூடும்போது மக்கள் முகக்கவசம் இல்லாமல் பேசுவதற்கு அதிக சாத்தியம் உண்டு.
அமலாக்க அதிகாரிகள் இந்த விதிமுறைகள் உணவகங்களில் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்வார்கள் என்றும் திரு வோங் கூறினார்.
திறந்தவெளி இடங்களில் ஒருங்கிணைந்த உடற்பயிற்சிகள்
ஸ்போர்ட்எஸ்ஜி விளையாட்டு மையங்கள், வீவக பகுதிகள் ஆகியவற்றில் உள்ள திறந்தவெளி இடங்களில் இனி ஒருங்கிணைந்த உடற்பயிற்சி நடவடிக்கைகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த உடற்பயிற்சி வகுப்புகள் பயிற்றுவிப்பாளர் ஒருவரின் வழிகாட்டுதலில் இடம்பெற வேண்டும். பங்கேற்பாளர்களுக்குள் பாதுகாப்பான இடைவெளி இருப்பதையும் பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படுவதையும் அந்தப் பயிற்றுவிப்பாளர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் வோங் கூறினார்.