இனப் பாகுபாடற்ற சமூகத்தையே அனைவரும் விரும்புவார்கள். அதில் இனப் பாகுபாடு கிடையாது. அணுகுமுறைகளிலும் நடைமுறைகளிலும் பாரபட்சம் கிடையாது.
வேலைகளுக்கு ஊழியர்களை அமர்த்தும்போது தகுதிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு சரியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் மாலிக்கி ஒஸ்மான் (படம்) தெரிவித்துள்ளார்.
ஆனால், இம்மாதிரியான சமூகத்துக்கு விருப்பப்படுதல், இனங்களுக்கிடையே உள்ள உண்மையான வேறுபாடுகளையும் சூழல்களையும் பார்க்காமல் இருந்து விடுதல் ஆகியவற்றில் மக்கள் குழப்பமடைந்துவிடக்கூடாது என்றும் அவர் விவரித்தார்.
“இனம் தொடர்பில் ஒருவர் தெரிவிக்கும் கருத்துகள் இனங்களுக்கிடையே சில சமயங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதில் சிங்கப்பூரர்கள் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது மற்றும் குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் கல்வி மற்றும் வெளியுறவு இரண்டாம் அமைச்சருமான டாக்டர் மாலிக்கி எச்சரித்தார்.
அதிபர் உரை மீதான விவாதத்தில் நேற்று பங்கேற்று பேசிய அவர், “சிங்கப்பூரர்கள் அனைத்து இனங்களையும் மதித்து நடக்க வேண்டும். அதுவே நமது நாட்டின் இன மற்றும் சமய நல்லிணக்கத்தையும் பல கலாசார பண்புகளையும் கட்டிக்காக்கும்.
“சிங்கப்பூரில் நியாயமான, சமநிலையான சமூகம் அமைய இந்தப் பண்புகள் முக்கிய தூண்களாக விளங்கும்,” என்று கூறிய டாக்டர் மாலிக்கி, அதற்குத் தேவையான முக்கிய கொள்கைகளாக மேற்குறிப்பிடப்பட்டவற்றைச் சுட்டினார்.
“முதலில், அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தை உருவாக்க, இனங்களுக்கிடையே வேற்றுமைகள் இருப்பதையும் அவற்றை ஆக்கபூர்வமான வழிகளில் அணுக வேண்டும் என்பதையும் சிங்கப்பூரர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.
“அவை கலாசாரப் பாரம்பரியங்கள், நடைமுறைகள், முன்னுரிமைகளை வலியுறுத்துதல் போன்றவற்றில் காணப்படும் வேற்றுமைகளாக இருக்கலாம். அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தில் அங்கம் வகிக்க சிங்கப்பூரர்கள் இந்த வேற்றுமைகளை அடையாளம் கண்டு, அவற்றை மதித்து, புரிந்துகொண்டு, அவற்றுக்கு ஏற்றவாறு நடைமுறைகளில் மாற்றங்களைச் செய்ய தயாராக இருக்க வேண்டும்.
“இனம் அடிப்படையிலான அடையாளம் நடப்பில் இருக்கவும் அதை மேம்படுத்தவும் சிங்கப்பூரர்கள் அனுமதியளிக்க வேண்டும். சுயஉதவி அமைப்புகள் உட்பட சமூக அளவிலான திட்டங்களுக்கு விரிவான கொள்கைகள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
“இது சமூகத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, உதவி தேவைப்படுவோருக்கு தகுந்த ஆதரவை வழங்க ஏதுவாக இருக்கும்,” என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
இனங்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளை முழுமையாக உணர்ந்து அதன்படி செயல்படுபவரே உண்மையான சிங்கப்பூரர் என்று கூறிய டாக்டர் மாலிக்கி, ஒருவர் தனது இனம் அடிப்படையிலான அடையாளத்தைக் கட்டிக்காக்கும் அதேவேளையில் சிங்கப்பூரர் என்ற ஒருமித்த அடையாளத்தையும் வெளிப்படுத்துவதில் எந்த உள்ளார்ந்த முரண்பாடும் இருக்கப் போவதில்லை. இதுவே சிங்கப்பூர் கலாசாரத்தின் முக்கிய பண்புநலன் என்றும் தமது உரையில் வலியுறுத்தினார்.