எளிதில் பாதிப்படையக்கூடியவர்கள், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள் போன்ற கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் அதிகம் உள்ளவர்கள் முதலில் கொவிட்-19 தடுப்பூசியைப் பெறத் தகுதிபெறுவர் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து கிடைத்தவுடன் இந்த இரு சாராருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.
பின்னர் படிப்படியாக பிறருக்கும் அது செலுத்தப்படும் என்று நேற்று முன்தினம் நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்கு திரு கான் எழுத்துபூர்வமாக தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி மருந்து தொடர்பான நாட்டின் அணுகுமுறை குறித்து விவரம் கேட்ட திரு ஆங் வெய் நெங் (வெஸ்ட் கோஸ்ட் குழுத்தொகுதி) மற்றும் திரு முரளி பிள்ளை (புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி) ஆகியோருக்கு திரு கான் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.
அனைத்துலக அளவில் கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிப்பதில் சிங்கப்பூர் உதவி வரும் அதேவேளையில் உள்ளூரிலும் மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக திரு கான் குறிப்பிட்டார்.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இரண்டு பில்லியன் தடுப்பூசி மருந்துகளை விநியோகிக்க வேண்டும் என்று அனைத்துலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டத்தின் இலக்காகும் என்று அவர் கூறினார்.