அமெரிக்கா, சிங்கப்பூர் தற்காப்பு அதிகாரிகள் நேற்று இங்கு சந்தித்துப் பேசினர். இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் வழக்கமாக நடத்தப்படும் உயர்மட்ட பாதுகாப்புக் கலந்துரையாடலுக்காக அவர்களின் சந்திப்பு நிகழ்ந்தது.
தற்காப்பு அமைச்சில் நடத்தப்பட்ட சிங்கப்பூர்-அமெரிக்க உத்திபூர்வ பாதுகாப்புக் கொள்கைக் கலந்துரையாடலுக்கு அமெரிக்க தற்காப்புக் கொள்கைப் பிரிவின் தற்காலிக அதிகாரி ஜேம்ஸ் ஆண்டர்சன், சிங்கப்பூரின் தற்காப்புத் துறை நிரந்தரச் செயலாளர் சான் ஹெங் கீ ஆகியோர் தலைமை வகித்தனர்.
நீண்டகால, உன்னத இருதரப்பு தற்காப்பு உறவுகளை இருவரும் மறுஉறுதிப்படுத்தினர்.
1990ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு இணங்க இருதரப்பு தற்காப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் அவ்விருவரும் கலந்தாலோசித்தனர்.