புத்தாக்கமும் மின்னிலக்கமும் தொடரும் நிலையில் உலகத் தொடர்புகள் சிங்கப்பூருக்கு இன்றியமையாதவை என கொள்ளைநோய் உணர்த்தி இருப்பதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
“பல்வேறு நாடுகளில் முடக்கநிலையும் பாதுகாப்பு இடைவெளியும் நடப்பில் உள்ளன. நாம் வாழும், வேலை செய்யும் முறைகளும் மாற்றுவடிவம் கண்டுள்ளன. ஏராளமானோர் இணையம் மூலம் பொருள் வாங்குகின்றனர். வர்த்தகங்கள் வேகமாக மின்னிலக்கப் பாதைக்கு மாறுகின்றன. காணொளி உரையாடல், இணையம் வழி கற்றல், மெய்நிகர் கருத்தரங்குகள் போன்றவையும் வழக்கமான நிகழ்வுகளாக மாறி வருகின்றன.
“இவற்றைப் பார்க்கையில், வர்த்தகங்களும் தனிப்பட்ட மனிதர்களும் மின்னிலக்கத் திறனைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தை கொவிட்-19 ஏற்படுத்தி உள்ளது என்றே கருதலாம்.
“எதிர்கால வளர்ச்சிக்கும் போட்டித்தன்மைக்கும் வர்த்தகங்கள் மின்னிலக்கத்தை அடித்தளமாக அமைத்துக்கொள்ள வேண்டி உள்ளது. ஒவ்வொரு நாடும் இதேபோல இயங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டு உள்ளது,” என்று திரு ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
டிபிஎஸ் மின்னிலக்க தினத்தை முன்னிட்டு மெய்நிகர் உரை நிகழ்த்திய அவர், மின்னிலக்கமயத்துக்கு மாறுவது என்பது கொள்ளைநோயின் குறுகியகால சவால்களை வெற்றிகொள்வது மட்டுமல்லாது நீண்டகால பொருளியல் அனுகூலங்களை அடையவும் கைகொடுக்கும் என்றார்.
“உலகச் சந்தையுடன் தொடர்பு கொள்ள, வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்த வர்த்தகங்களுக்கு மின்னிலக்கமயம் உதவும். எனவே தங்களது வளங்களை மாற்றியமைத்து தொழிலுக்குப் புத்துயிரூட்ட அத்தகைய வாய்ப்புகளை நமது வர்த்தகர்கள் பற்றிக்கொள்ள வேண்டும்,” என்றார்.