கிழக்கு-மேற்கு எம்ஆர்டி ரயில் தடத்தில் அல்ஜுனிட்டுக்கும் பாசிர் ரிஸ்ஸுக்கும் இடைப்பட்ட பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் 50 நிமிடங்களுக்குப் பயணத் தடை ஏற்பட்டது.
அன்று இரவு 7.08 மணிக்கு எஸ்எம்ஆர்டி நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் 25 நிமிட தாமதம் இருக்கும் என கூறியது.
பின்னர் 7.31 மணிக்கு பதிவேற்றப்பட்ட தகவலில் ரயில் சேவை கொஞ்சம் கொஞ்சமாக வழக்கநிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இறுதியாக, ரயில் பயணச் சேவை முற்றிலும் மீண்டுவிட்டதாக இரவு 7.52 மணிக்கு எஸ்எம்ஆர்டி கூறியது.
முன்னதாக, பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ பூகிஸ் நிலையத்திற்கும் பாசிர் ரிஸ் நிலையத்திற்கும் இடைப்பட்ட தூரத்திற்கு இலவசப் பேருந்துச் சேவைகள் விடப்பட்டுள்ளதாக எஸ்எம்ஆர்டி அறிவித்திருந்தது.
சம்பவம் குறித்து நேற்று அந்நிறுவனம் விளக்கம் அளித்தது.
ஜூரோங் ஈஸ்ட்டை நோக்கிய வழித்தடத்தில் உள்ள பாய லேபார் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை மாலை 6.45 மணியளவில் ரயில் ஒன்றில் பழுது ஏற்பட்டதாகவும் ரயில் சேவை தாமதத்திற்கு அதுவே காரணம் என்றும் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் எஸ்எம்ஆர்டி கூறியது.
“எதனால் பழுது ஏற்பட்டது என்பதை விசாரிக்க அந்த ரயில் உடனடியாக சேவையிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்டு பணிமனைக்கு அனுப்பப்பட்டது.
“பயணிகளின் சிரமத்தைக் குறைக்க இலவசப் பேருந்துச் சேவை விடப்பட்டது.
“மேலும் ரயில்களிலும் நிலையங்களிலும் சேவை தாமதம் குறித்த அறிவிப்புகள் உடனுக்குடன் செய்யப்பட்டன. நீண்ட நேரம் பயணம் செய்ய நேர்ந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம்,” என எஸ்எம்ஆர்டி பேச்சாளர் தெரிவித்தார்.