ஒருவரை கொவிட்-19 தொற்றியுள்ளதா எனக் கண்டறிவதற்கான நேரத்தை வெகுவாகக் குறைக்கும் வகையில், உள்ளூர் உயிர்தொழில்நுட்ப நிறுவனமான ‘வெரிடஸ் லேபரட்டரீஸ்’ புதிய பரிசோதனைத் தொகுப்பை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
மரபணு மூலக்கூறைப் பிரித்தெடுக்காமல், நேரடியாக எச்சில் மாதிரியில் இருந்தே ஒருவரை கிருமி தொற்றியுள்ளதா என அந்நிறுவனத்தின் ‘வெரிஆர்டி கொவிட்-19 பிசிஆர்’ தொகுப்பின் மூலம் கண்டறியலாம்.
இதனால், ஒட்டுமொத்த பரிசோதனைக்கு கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் குறையும் எனக் கூறப்படடது.
இந்தப் புதிய பரிசோதனைத் தொகுப்பை மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் விநியோகிக்க சுகாதார அறிவியல் ஆணையம் தற்காலிகமாக அனுமதி அளித்துள்ளது.
இதே நிறுவனத்தின் ‘ஸீரோபிரிப்’ எச்சில் சேகரிப்புத் தொகுப்பின் மூலம், நோயாளியின் எச்சில் மாதிரியைச் சேகரித்து, அதை நேரடியாக கொரோனா பரிசோதனைக்குப் பயன்படுத்தலாம்.
நோயாளிகள் புனலில் ஒரு மி.லி. எச்சிலைச் சேகரித்தபின், அதனுடன் ஒரு திரவம் சேர்க்கப்பட்டு, கிருமியின் மரபணு மூலக்கூறு பாதுகாக்கப்படும்.
இவ்விரு பரிசோதனைத் தொகுப்புகளைக் கொண்டு 99% துல்லியமாக முடிவுகளை அறியலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.