தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் இருக்கும் ஒரு காப்பி கடைக்கு வெளியே மூன்று ஆண்டுகளுக்கு முன் பட்டப்பகலில் பலர் முன்னிலையில் தன் மருமகனைக் கத்தியால் குத்திக் கொலை செய்த 72 வயது மாமனாருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
டான் நாம் செங் என்ற அந்த முதியவர் மீது தொடக்கத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பிறகு அவரின் மனநிலை மருத்துவ அறிக்கையைத் தொடர்ந்து நோக்கமற்ற மரணம் விளைவித்த குற்றச்சாட்டாகக் குறைக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது.
வழக்கு விசாரணையில், குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசினர் தரப்பு வாதிட்டது. ஆனால் தன் கட்சிக்காரரின் வயதைக் கருத்தில் கொண்டு அவருக்கு கொடுக்கப்படும் தண்டனை ஆயுள் தண்டனை அளவுக்கு இருக்கக்கூடாது என்பதால் ஏழரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கும்படி குற்றவாளியின் தரப்பு வாதிட்டது.
இந்த விவகாரம் பற்றி பல விவரங்கள் விசாரணையில் தெரிவிக்கப்பட்டன.
டான் நாம் செங்கிற்கு மூன்று புதல்விகள். அவர் 1974ல் டிஎன்எஸ் ஷிப்பிங் என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். தொழில் பல்வேறு நிறுவனங்களாகப் பல்கிப் பெருகியது. மூன்று புதல்விகளும் தொழிலைப் பார்த்துக்கொண்டனர்.
டானின் மூத்த புதல்வியான ஷைலர் டான் என்பவரை 2005ல் ஸ்பென்சர் துப்பானி என்பவர் மணம் செய்துகொண்டார்.
மாமனார் தொழிலை மருமகனும் கவனித்துக்கொண்டார்.
டானின் நிறுவனங்கள் எல்லாம் டிஎன்ஸ் ஓஷியன் லைன்ஸ் என்ற பெயரில் ஒன்று சேர்க்கப்பட்டன.
இந்த நிறுவனம் 2016ல் பெரிய நிறுவனக் குழுமத்திடம் விற்கப்பட்டது. அதற்கு துப்பானியே தலைமை நிர்வாகியாக பொறுப்பு ஏற்றார். இந்த விற்பனையை துப்பானிதான் உத்தேசித்து இருந்தார். புதிய நிறுவனத்தில் தனது பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதால் மாமனார், தன் மனைவி இருவரிடத்திலும் பேசி அவர்களின் பங்குகளைத் தன் பெயருக்கு துப்பானி மாற்றிக்கொண்டார்.
மாமனாரின் பங்குகளுக்குப் பதிலாக அவருக்கு $450,000 கொடுக்கப்பட்டது. ஆனால் மாமனா ருக்கு மனநிறைவு இல்லை.
இந்நிலையில், துப்பானிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உண்டு என்பதும் அந்தப் பெண் மூலம் அவருக்கு இரண்டு பிள்ளை கள் உண்டு என்பதும் 2017ல் தெரியவந்தது.
இதனிடையே, துப்பானிக்கும் அவரின் மனைவியான ஷைலர் டானுக்கும் இடையில் மணவிலக்கு இணக்கம் ஏற்பட்டது. ஆனாலும் மூன்று பிள்ளைகளை யார் வளர்த்து உருவாக்குவது போன்ற விவகாரங்களில் இருவருக்கும் இடையில் பிரச்சினை இருந்து வந்தது.
மனைவிக்கும் தனக்கும் இடையில் நடந்த பேச்சை எல்லாம் துப்பாணி ஒலிப்பதிவு சாதனத்தில் பதிந்து வந்ததைக் கண்டுபிடித்த மாமனார், இதை மணவிலக்கு வழக்கில் துப்பாணி தனக்கு சாதக மாகப் பயன்படுத்த திட்டமிடுகிறார் என்று சந்தேகப்பட்டார்.
இந்தச் சூழலில், 2017 ஜூலை 4ஆம் தேதி மாமனார் டானின் இளைய மகள் ஷெர்ரி நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டார். நிறுவனத்தில் எல்லா பங்குகளையும் எடுத்துக்கொண்டு, தன் மூத்த மகளை மணவிலக்கு செய்துவிட்டு துப்பானி ஏமாற்றப் பார்க்கிறார் என்று மாமனார் நம்பினார்.
மாமனார் டான் 2017 ஜூலை 10ஆம் தேதி செசில் கோர்ட்டில் இருந்த அலுவலகத்துக்குச் சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது வழியில் தெலுக் ஆயர் ஸ்திரீட்டில் துப்பானியைப் பார்த்தார். அலுவலகம் போன டான் அங்கு சாப்பாட்டுக் கூடத்தில் இருந்த ஒரு கத்தியை எடுத்து பையில் வைத்துக்கொண்டு காப்பிக் கடைக்குச் சென்று அங்கு இருந்த துப்பானியிடம் ‘நீ மகா மோசம்’’ எனச் சொல்லி அவரைக் குத்தினார்.
பூன் டாட் ஸ்திரீட்டில் துப்பானி மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்களிடம், ‘இவர் எனது மருமகன்தான். யாரும் உதவி செய்யாதீர், சாகட்டும்’ என்று டான் சொன்னார். பிறகு நடந்ததை தன் புதல்வியிடமும் அவர் கூறியதாக விசாரணை யில் தெரிவிக்கப்பட்டது.