பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத மேலும் மூன்று உணவு, பானக் கடைகளுக்கு, பத்து நாட்களுக்கு மூட உத்தரவு இடப்பட்டது. அத்துடன் நான்கு உணவகங்களுக்குத் தலா $1,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மூட உத்தரவிடப்பட்ட வர்த்தகங்களில் புளோக் 261, சிராங்கூன் சென்ட்ரல் டிரைவில் அமைந்துள்ள பானக் கடையும் ஒன்று. அதிகாரிகள், சென்ற சனிக்கிழமை இரவு 10.55 மணிக்கு அங்கு சென்றபோது வாடிக்கையாளர்கள் வெளிப்புற மேசைகளில் அமர்ந்து மது அருந்திக்கொண்டிருந்தனர். கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைள்) சட்டத்தின் கீழ், இரவு 10.30 மணிக்கு மேல் மதுபானங்களை விற்கவோ அருந்தவோ கூடாது.
ஐந்து பேருக்கு மேல் அடங்கிய கும்பலை அனுமதித்தது, அவர்களை ஒன்றாக அல்லது பிரித்து உட்கார வைத்து கலந்துறவாட விட்டது, ஒரு மீட்டர் இடைவெளியின்றி வாடிக்கையாளர்களை அமர வைத்தது போன்ற விதிமீறல்களுக்காக நான்கு கடைகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் தளர்வு தொடங்கியது முதல் இத்துடன் 45 உணவு, பானக் கடைகள் மீது அதிகாரிகள் இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இவற்றில் 26 உணவு, பான வர்த்தகங்களுக்கு மூடச் சொல்லி உத்தரவும் 19 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டன.
இந்நிலையில் ஐந்து பேர் அடங்கியோர் கும்பலாக ஒன்றுகூட அனுமதிக்கக்கூடாது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு அதன் அறிக்கையில் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஒரே மேசையில் அமராமல் வெவ்வேறு மேசைகளில் அவர்கள் கும்பலாக அமர்வதும் ஏற்றுக்கொள்ளப்படாது என்று கூறப்பட்டது. வாடிக்கையாளர்கள் இத்தகைய கோரிக்கைகளை விடுத்தாலும் கடை உரிமையாளர்கள் அவற்றை ஏற்றுக்கொள்ள அனுமதி இல்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இருப்பினும் ஒரே வீட்டில் வசிப்போர், ஐந்து பேருக்கு மேல் அடங்கிய கும்பலாக வந்தால் அவர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் ஒரு மீட்டர் இடைவெளியுடன் வெவ்வேறு மேசைகளில், ஒரு மேசைக்கு ஐந்து பேர் என்ற கணக்கில் அமரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஒரே வீட்டைச் சேர்ந்தவர்களா என்பதை கடைகள் சரிபார்த்துக் கொண்டு அதன் அடிப்படையில் அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கலாம் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
“சிங்கப்பூர் மீண்டும் அதன் வர்த்தகங்களைத் திறப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் அதைப் பொறுப்பான, பாதுகாப்பான முறையில் மேற்கொள்ள வேண்டும். சமூகத் தொற்றுச் சம்பவங்களும் விபரீதப் பின்விளைவுகளும் உருவாகாமல் நாம் காத்திட வேண்டும்,” என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ நேற்று தம் ஃபேஸ்புக் பதிவில் கூறியிருந்தார்.