கம்போங் கிளாமில் உள்ள தேசிய நினைவுச்சின்னமான சுல்தான் பள்ளிவாசலில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சிஹுவா தொடக்கப் பள்ளி மாணவர்கள் தங்களது வகுப்பறையில் இருந்தவாறே நேற்று அந்த வழிபாட்டுத் தலத்தை மெய்நிகர் முறையில் சுற்றிப் பார்த்தனர்.
பள்ளி மாணவர்கள் தேசிய நினைவுச் சின்னங்களைச் சுற்றிப் பார்க்கும் விதமாக, தேசிய மரபுடைமைக் கழகம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
‘மொபைல் டெலிபிரசன்ஸ் ரோபோ’ என அழைக்கப்படும் தொலைவியக்கக் கருவியால் இயக்கப்படும் நகரும் கணினித்திரையின் உதவியுடன் மாணவர்கள் அந்த மெய்நிகர் சுற்றுலாவிற்குச் சென்று வந்தனர்.
சுற்றுப்பயண வழிகாட்டியான திரு ராபர்ட் சான், 70, சுல்தான் பள்ளிவாசலில் அந்த இயந்திர மனிதனுடன் இருக்க, கணினிதுணைகொண்டு மாணவர்கள் அச்சாதனத்தை இயக்கினர். மாணவர்களின் கேள்விகளுக்கும் திரு சான் பதிலுரைத்தார்.
அந்த இயந்திர மனிதனின் துணையுடன் மாணவர்கள் அந்தப் பள்ளிவாசலின் பல பகுதிகளையும் அதன் கட்டடக்கலையையும் கண்டு மகிழ்ந்தனர்.
பள்ளிகளுக்காக இத்தகைய முயற்சி இடம்பெற்றது இதுவே முதன்முறை.
“சிங்கப்பூரின் செழுமைமிக்க மரபுடைமையை, அதுவும் இப்போதைய நெருக்கடியான காலகட்டத்தில் மாணவர்கள் கண்டுணர இந்த மெய்நிகர் நேரடி சுற்றுலா அற்புதமானதொரு வழி. சிங்கப்பூரையும் அதைத் தாண்டியும் கண்டறிந்துகொள்ள மாணவர்களுக்கு இத்தகைய மெய்நிகர் அனுபவங்கள் புதிய கதவுகளைத் திறந்து விடுகிறது,” என்றார் சிஹுவா தொடக்கப் பள்ளியின் முதல்வர் திருமதி லீ ஹுய் ஃபெங்.
தேசிய மரபுடைமைக் கழகத்தின் மற்றொரு திட்டத்தின்கீழ் இந்த இயந்திர மனிதன் சன் யாட் சென் நினைவகத்திலும் இந்திய மரபுடைமை நிலையத்திலும் இப்போதைக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முதுமை, உடல்நலக் குறைவு, உடற்குறை, நடமாட்டப் பிரச்சினைகள் போன்றவை காரணமாக மரபுடைமைச் சுற்றுலா செல்ல முடியாதவர்களுக்கு உதவ இந்தத் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
இந்த ‘நினைவுச் சின்ன ரோபோ சுற்றுலாக்கள் திட்டத்தை’ சிஹுவா, எட்ஜ்ஃபீல்டு தொடக்கப் பள்ளிகளில் சோதித்துப் பார்த்து வருகிறோம் என்றும் அக்டோபரில் இருந்து மற்ற அனைத்து தொடக்கப் பள்ளிகளும் உயர்நிலைப் பள்ளிகளும் இத்தகைய சுற்றுலாவிற்குப் பதிவு செய்யலாம் என்றும் மரபுடைமைக் கழகத்தின் துணைத் தலைமை நிர்வாகி திரு ஆல்வின் டான் தெரிவித்தார்.
“மாணவர்கள் பள்ளிகளிலேயே இருக்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனால் நமது தேசிய நினைவுச் சின்னங்களுக்கு வழக்கமாக அவர்கள் மேற்கொள்ளும் கற்றல் பயணங்கள் இடம்பெறாமல் போகலாம். இதைக் கருத்தில்கொண்டே இந்த மெய்நிகர் சுற்றுலா திட்டத்தை உருவாக்கினோம்,” என்றார் திரு டான்.
சுல்தான் பள்ளிவாசலுடன் முன்னாள் ஃபுல்லர்ட்டன் கட்டடம், சிசெட்-எல் யூதக் கோவில் போன்ற நினைவுச் சின்னங்களும் அடுத்த ஆண்டு இத்திட்டத்தில் சேர்க்கப்படும். காலம் வரும்போது, சிங்கப்பூரின் 73 நினைவுச் சின்னங்களில் மேலும் பல இந்த மெய்நிகர் சுற்றுலாப் பட்டியலில் இணையும் என கழகம் நம்புகிறது.
ஆர்வமுடைய பள்ளிகள் அடுத்த மாதத்தில் இருந்து இந்த 45 நிமிட மெய்நிகர் சுற்றுலாவிற்கு NHB_NationalMonuments@nhb.gov.sg எனும் மின்னஞ்சல் முகவரி மூலமாகப் பதிவு செய்யலாம்.