மின்னிலக்கத் திறன்களை வளர்க்க அறநிறுவனங்களுக்கு புதிய ஆதரவுத்தொகுப்பு

மின்னிலக்கத் திறன்களை வளர்க்க அறநிறுவனங்களுக்கு புதிய ஆதரவுத்தொகுப்பு

2 mins read
20fcdc5c-2eb8-49cc-8710-6c3964000628
'சேரிட்டிஸ் கோடிஜிட்டல் கிட்' எனப்படும் அந்த ஆதரவுத் தொகுப்பு, கொவிட்-19 கொள்ளைநோய்க்கு இடையே தங்களது திறன்களை வலுப்படுத்த முயலும் அறநிறுவனங்களுக்கான மூன்று உதவி நடவடிக்கைகளுள் ஒன்று. கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் (இடமிருந்து இரண்டாவது) நேற்று இதனைத் தெரிவித்தார். படம்: MCCY -

அறநிறுவனங்கள் தங்களது மின்னிலக்கத் திறன்களை வளர்ப்பதற்கான ஆதரவைப் பெற உள்ளன. அவை வெளிப்படையாக நடந்துகொள்வதை ஊக்குவிக்கவும் பல்வேறு ஆதரவு நடவடிக்கைகள் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டன.

மின்னிலக்கமயத்தைக் கடைப்பிடிக்கும் அறநிறுவனங்களுக்கு உதவுவதற்கான ஆதரவுத் தொகுப்பும் அவற்றுள் அடங்கும். அந்தத் தொகுப்பு வரும் நவம்பரில் நடப்புக்கு வரும். அதன் பின்னர் நிறுவன, நிர்வாகச் செயல் பாடுகளில் மின்னிலக்கத்தைப் புகுத்த அறநிறுவனங்களுக்கு உதவி கிட்டும்.

'சேரிட்டிஸ் கோடிஜிட்டல் கிட்' எனப்படும் அந்த ஆதரவுத் தொகுப்பு, கொவிட்-19 கொள்ளைநோய்க்கு இடையே தங்களது திறன்களை வலுப்படுத்த முயலும் அறநிறுவனங்களுக்கான மூன்று உதவி நடவடிக்கைகளுள் ஒன்று. கலாசார, சமூக, இளையர் அமைச்சர் எட்வின் டோங் நேற்று இதனைத் தெரிவித்தார்.

அறநிறுவன ஆட்சிமுறை மெய்நிகர் மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், சிங்கப்பூரை ஒன்றிணைக்கும் கரங்களாக அறநிறுவனங்கள் திகழ்வதாகக் குறிப்பிட்டார்.

சமூகத்தில் எளிதில் பாதிப்புக்கு ஆளாவோருக்கு நன்மை பயக்கும் பல்வேறு பணிகளில் ஈடுபடுவதன் மூலம் அவை இன்றியமையாத பங்கு வகிப்பதாகவும் திரு டோங் சொன்னார்.

"அனைவரையும் உள்ளடக்கிய, அக்கறை நிறைந்த சிங்கப்பூரை உருவாக்கும் தேசிய நடவடிக்கைக்கு அறப்பணிகளின் பல செயல்பாடுகள் அவசியமானவை," என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் உள்ள சுமார் 500 அறநிறுவனங்களின் பிரதிநிதிகளும் பங்காளிகளும் காணொளி வழியாக நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்றனர்.

அறநிறுவன வெளிப்படைத்தன்மை கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அடுத்த மாதம் அதன் விவரங்கள் வெளியிடப்படும் என்றும் திரு டோங் இம்மாநாட்டில் அறிவித்தார்.

பொறுப்புடனும் வெளிப்படையாகவும் நடந்துகொள்வதன் மூலம் கொடையாளர்களிடத்திலும் ஆதரவாளர்களிடத்திலும் நன்னம்பிக்கையை வளர்க்க முடிவும் என்றார் அவர்.

"நன்கு நிர்வகிக்கப்படும் அறநிறுவனம் நம்பிக்கை நிறைந்த கொடையாளரைப் பெற்றிருக்கும். இந்த மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு அறநிறுவனங்கள் தங்களது கொள்கையையும் அணுகுமுறையையும் வெளிப்படையாகத் தெரிவிக்க ஒரு வழிகாட்டியாக உதவும்.

"வெளிப்படையாக அறிவிக்கும் நடைமுறைகளையும் ஆதரவாளர்களிடம் தங்களது செயல்பாடுகளை தெளிவாகத் தெரிவிக்கும் முறையையும் கடைப்பிடிப்பதற்கான குறிப்புகளை அந்தக் கட்டமைப்பு வழங்கும்," என்றார் அமைச்சர்.