மனமுறிவுக்கு விண்ணப்பிப்பது பற்றி யோசிக்கும் தம்பதிகளுக்கு, குறிப்பாக பிள்ளைகள் உள்ள தம்பதிகளுக்கு மேலும் ஆதரவளிக்க, சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சு பொதுமக்களிடமிருந்து கருத்து சேகரிக்கிறது.
நேற்று தொடக்கம், நவம்பர் 28ஆம் தேதி வரை, மனமுறிவுக்கு விண்ணப்பிப்பது பற்றி யோசிக்கும் தம்பதிகளுக்கு உதவும் புதிய இணையவாசலில் என்னென்ன அம்சங்கள் உள்ளடக்கப்படலாம், திருமணப் பந்தங்களைக் காப்பாற்றக்கூடிய வழிவகைகள் போன்றவை பற்றி சிங்கப்பூரர்களிடம் அமைச்சு கருத்து சேகரிக்கும்.
இந்த முயற்சியில், ஏற்கெனவே மணமுறிவைக் கடந்து வந்தவர்கள், மனமுறிவுக்கு விண்ணிப்பிப்பது பற்றி யோசிக்கும் ஆனால் இன்னும் அதற்குரிய நடவடிக்கையை எடுக்காதவர்கள் என 100 சிங்கப்பூரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இதன் தொடர்பில் நேற்று அறிக்கை வெளியிட்ட அமைச்சின் சார்பில் கருத்துரைத்த அதன் பேச்சாளர், “குடிமக்களின் யோசனைகளையும் கருத்துகளையும் கருத்தில் கொண்டு, புதிய இணையவாசலில் உள்ளடக்கக்கூடிய அம்சங்களை அமைச்சு முடிவு செய்யும்.
“இணையவாசலில் உள்ள அம்சங்கள் மணமுறிவுக்குப் பிந்திய விளைவுகளைத் தம்பதிகள் எவ்வாறு சமாளிக்கலாம், குறிப்பாக பெற்றோரின் மணமுறிவால் பெரிதும் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு எவ்வாறு ஆதரவளிக்கலாம் போன்றவற்றுக்கு விளக்கமளிக்கும்,” என்றார்.
புதிய இணையவாசல் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் தயாராகிவிடும் என்றும் குறிப்பிட்ட அமைச்சு அந்த இணையவாசலுக்கு ஒரு பெயர் வைக்கவும் யோசனைகளை வரவேற்கிறது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், மத்திய சேம நிதி போன்ற இணையவாசலில் உள்ள தகவலும் வளங்களும் மணமுறிவு பெறும் தம்பதிகளுக்கு பயனுள்ளதாக அமையும்.
மேலும், தம்பதிகள் தங்கள் மணவாழ்க்கையில் நிலைமையையும் தங்கள் பிள்ளையின் தேவைகளைப் புரிந்துகொள்ளவும் உதவுவதுடன் இணையம் வழி ஆலோசனை ஆதரவுச் சேவையும் இணையவாசலில் வழங்கப்படும்.
சிங்கப்பூர் தம்பதிகளுடனான சந்திப்புகளுக்குப் பிறகு, அமைச்சு ஷரியா நீதிமன்றத்துடன் இணைந்து பணியாற்றி, முஸ்லிம் தம்பதிகளுக்கான ஷரியா நீதிமன்றத்தின் இணையவாசலில் தேவையான தகவல்களை சேர்க்கும்.
அதேவேளையில் ஷரியா நீதிமன்றம், முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்துடன் அணுக்கமாகப் பணியாற்றி, சிங்கப்பூர் மலாய்/முஸ்லிம்களுக்குத் தேவையான தகவல்கள் தனது இணையவாசலில் இருப்பதை உறுதி செய்யும்.
அமைச்சின் அறிக்கையில் கருத்துரைத்திருந்த சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணை அமைச்சர் சுன் சூலிங், “எங்களால் முடிந்தவரை திருமணங்களைக் காப்பாற்றவே விரும்புகிறோம்.
“வேறு வழியின்றி மணமுறிவு நிகழ வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும்போது, மணமுறிவால் அவர்களின் பிள்ளைகளின் நல்வாழ்வு குறித்து பெற்றோர் என்ற முறையில் அவர்கள் நல்ல முடிவெடுக்க நாங்கள் உதவுவோம்.
“மணமுறிவால் அனைத்துத் தரப்பினருக்கும், குறிப்பாக அவர்களில் பிள்ளைகளுக்கு ஏற்படும் நீண்டகால விளைவுகள், குறித்து தெளிவாக விளக்க அமைச்சு ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்,” என்றும் தெரிவித்தார்.
இது பற்றி கருத்து கூற விரும்பு வோர் msf_fdg@msf.gov.sg எனும் மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்.