நினைவாற்றல் குறைபாடு உள்ள முதியவர்களின் நினைவாற்றலைப் பெருக்க உதவும் வகையில் புதிய செயலி வெளியிடப்பட்டு உள்ளது. பழைய நினைவலைகளைக் கிளறிவிட்டு அதன் மூலம் நினைவாற்றலை அதிகரித்து முதியோருக்கு அந்தப் புதிய செயலி பெரிதும் உதவும்.
நினைவாற்றல் மறதியால் பாதிக்கப்பட்டுள்ள முதியோருடன் கலந்துறவாடி அவர்களுக்கு உதவ அந்தச் செயலியை பராமரிப்பாளர்கள் பயன்படுத்த முடியும்.
சிங்கப்பூர் தேசிய மரபுடைமை வாரியம், பிரிட்டிஷ் மன்றம், தேசிய லிவர்பூல் அருங்காட்சியகம் ஆகியவை நேற்று அந்தச் செயலியை வெளியிட்டன. அதில் சிங்கப்பூரின் கடந்த காலத்தைச் சேர்ந்த அன்றாட அம்சங்களும் படங்களும் பல்லூடகத் தகவல்களும் இடம்பெற்று இருக்கின்றன.
‘மை ஹவுஸ் மெமரிஸ்’ எனப்படும் அந்தச் செயலி தொடக்கத்தில் 2014ல் பிரிட்டனில் வெளியிடப்பட்டது. பிறகு அமெரிக்காவிலும் அது பயன்படுத்தப்பட்டது. அது 1930கள் முதல் 1990கள் வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல அம்சங்கள் பற்றிய நினைவலைகளைத் தூண்டிவிட்டு முதியவர்கள் தங்கள் சொந்த கதைகளைத் தங்களுக்குப் பராமரிப்புச் சேவை வழங்குவோருடன் பகிர்ந்துகொள்ள புதிய செயலி உதவும்.
1964ல் இங்கேயே தயாரிக்கப்பட்ட கறுப்பு-வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி, தோ பாயோவில் கட்டப்பட்ட முதலாவது வீவக வீடுகள் போன்ற பலவும் அந்தச் செயலியில் இடம்பெற்றுள்ளன. இவை முதியவர்களுக்குப் பழைய நினைவுகளைக் கிளறிவிடும்.
செயலியை எப்படி பயன்படுத்துவது என்பதை 400 சுகாதார மற்றும் சமூகப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் இதர முதியோர் பராமரிப்பாளர்களுக்கும் கற்றுக் கொடுப்பதற்காக மொத்தம் 10 பயிற்சித் தொடர்கள் நடக்கும்.
ஆப்பிள் ஸ்டோர், கூகல் பிளே ஸ்டோர் மூலம் ‘மை ஹவுஸ் மெமரிஸ்’ செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்தச் செயலியில் உள்ளவை அடுத்த ஆண்டு தமிழ், மாண்டரின், மலாய் மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மேலும் பல முதியவர்களை எட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
புதிய செயலியை மேற்சொன்ன மூன்று அமைப்புகளும் கூட்டாக உருவாக்கி இருக்கின்றன. இதனிடையே, இந்தச் செயலியைப் பயன்படுத்திய 86 வயது லாவ் ஹான் சியோங் என்ற முதியவர், “இந்தச் செயலியில் இப்போது புழக்கத்தில் இல்லாத பல பொருட்களின் படங்களும் உள்ளன. அவற்றில் விரும்புவதை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
“சில படங்கள் என்னுடைய அந்தக்கால நினைவைத் தூண்டிவிடுகின்றன,” என்று கூறினார்.
இந்த முதியவர், முதியோருக்கான புக்கிட் பாத்தோக் வெஸ்ட் என்டியுசி பகல்நேர சுகாதார நிலையத்தைச் சேர்ந்தவர்.