இவ்வாண்டு இறுதிக்குள் 5ஜி கட்டமைப்பில் ஏறத்தாழ 1,000 வேலைகள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றில் மூன்றில் ஒரு பங்கு வேலைகள் புதிய வேலைகளாக இருக்கும். ஏற்கெனவே பணியில் உள்ள தொலைத்தொடர்பு நிபுணர்கள் எஞ்சிய வேலைகளைச் செய்ய அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையத்திற்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் இடையிலான பங்காளித்துவ முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலைவாய்ப்புத் திட்டம் அமைகிறது. சிங்கப்பூரில் 5ஜி கட்டமைப்பை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் முழுவீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வரும் வேளையில், இந்தத் துறையில் நிபுணர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மெய்நிகர் வாயிலாக நேற்று நடைபெற்ற ‘கனெக்டெக் ஏஷியா’ எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இந்த விவரங்களை அறிவித்தார்.
“வன்பொருள், மென்பொருள் உருவாக்கத்தில் நாம் கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், நமது வளர்ச்சியில் மக்கள் மையமாக விளங்குகின்றனர். 5ஜி உள்கட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேலைகள் உருவாக்கப்படுகின்றன,” என்றார் அவர்.
ஏற்கெனவே பணியில் உள்ள தொலைத்தொடர்பு நிபுணர்களுக்குப் பயற்சியளிக்கும் திட்டம் இவ்வாண்டு இறுதியில் தொடங்கும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 5,000 5ஜி நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டங்கள் உள்ளன.
வேலைவாய்ப்புகளுடன் திறனாளர்களை இணைப்பதன் தொடர்பில் மேற்பார்வையிட, இங்குள்ள நான்கு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றுடனும் 5ஜி ஊழியரணி உருமாற்றக் குழுக்களைத் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. ‘டெக்ஸ்கில்ஸ் ஆக்சலரேட்டர்’ எனும் திட்டத்தின் மூலம் இது செயல்படுத்தப்படுகிறது.
5ஜி கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு, பொறியியல் தீர்வு போன்ற அம்சங்களில் ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கும் இருக்கக்கூடிய திறனாளர் தேவையை அடையாளம் காண இந்தக் குழுக்கள் உதவும் என்று திரு ஈஸ்வரன் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம், சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி ஆகிய உயர்கல்வி நிலையங்கள் அடங்கிய கூட்டமைப்பு ஒன்றை தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் நியமிக்கவிருக்கிறது.நாட்டின் 5ஜி கட்டமைப்பில் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை அது ஒருங்கிணைக்கும்.
“நமது ஊழியரணிக்கு சரியான திறன்களை வழங்க தொழில்துறையுடன் இணைந்து நாங்கள் அணுக்கமாகப் பணியாற்றவுள்ளோம். அப்போதுதான் நமது ஊழியர்களுக்குச் சிறந்த வேலைகள் கிடைக்கும்.
“புத்தாக்கத்திற்கான சிங்கப்பூரின் ஆற்றலை விரிவுபடுத்த 5ஜி உள்கட்டமைப்புடன் வலுவான, திறன்பெற்ற ஊழியரணி தேவை,” என்று திரு ஈஸ்வரன் விவரித்தார்.
4ஜி கட்டமைப்பைவிட மேம்படுத்தப்பட்டுள்ள 5ஜி தொழில்நுட்பம், 20 மடங்கு வேகமாக இணையத்தில் உலாவ வகை செய்கிறது.
தற்போது ஆறு கூட்டமைப்புகள் 5ஜி செயல்பாடுகளைப் பரிசோதித்து வருகின்றன.