துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், கொரோனா கிருமிக்கு எதிரான போரில் சிங்கப்பூர் அடைந்துள்ள முன்னேற்றம், நாட்டின் நிதி நிலைமை, இந்த நெருக்கடியிலிருந்து வலுவாக வெளிப்படுவதற்கான உத்திகள் போன்றவை குறித்து வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சரவை அறிக்கையை வெளியிட உள்ளார்.
வளங்களை மறுஒதுக்கீடு செய்வது பற்றி ஆகஸ்ட் 17ஆம் தேதி அவர் வெளியிட்ட அறிக்கையின்படி, வர்த்தகங்கள், ஊழியர்களுக்கான ஆதரவை நீட்டிப்பது குறித்த துணை அறிக்கையை திங்கட்கிழமை அரசாங்கம் வெளியிடும் என்று திரு ஹெங் தமது ஃபேஸ்புக் பதிவில் நேற்று தெரிவித்தார்.
ஏறக்குறைய $8 பில்லியன் அளவிலான நடவடிக்கைகள் அடங்கிய, இந்த அறிக்கை மற்றும் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்கும்.
பொருளாதார கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும், நிதி அமைச்சருமான திரு ஹெங், அடுத்த வாரம் தமது அமைச்சர்நிலை அறிக்கை, விவாதத்திற்கான சூழலை வழங்குவதாகும் என்றார்.
“முன்னெப்போதும் இல்லாத நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்ளும் வேளையில், சிங்கப்பூர் தொடர்ந்து, சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு முன்னேறும்,” என்று அவர் கூறினார்.
கடந்த ஒன்பது மாதங்களாக சிங்கப்பூர் கொவிட்-19 கொள்ளைநோயுடன் அனைத்து முனைகளிலும் போராடி வருவதாகவும், இதுவரையில் கிட்டத்தட்ட $100 பில்லியனுக்கு நான்கு வரவுசெலவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதுடன் வர்த்தகங்கள், ஊழியர்கள், குடும்பங்களுக்கு மேலும் கூடுதலான ஆதரவை வழங்க ஆகஸ்டில் தாம் உறுதி அளித்துள்ளதாகவும் திரு ஹெங் தெரிவித்தார்.
“ஒரு நாடாக எங்கள் கூட்டு முயற்சிகள் இதுவரை பலனளித்துள்ளன. இப்போது சமூக பரவல் குறைந்துள்ளது. ஆனால் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.
“நாங்கள் பாதுகாப்பான முறையில் நமது பொருளியலை படிப்படியாக மீண்டும் திறந்து வருகிறோம். ஆனால் நம் எதிரே நிச்சயமற்ற தன்மை உள்ளது. மேலும் பலர் தங்கள் வேலைகள் குறித்து பதற்றத்துடன் இருப்பது புரிந்துகொள்ளக்கூடியது.
“கூடுதல் உதவித் திட்டங்கள் பற்றிய அறிவிப்பு, வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் மிகவும் தேவையான உறுதிப்பாட்டை அளித்துள்ளது,” என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
வரும் திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அமைச்சர்நிலை அறிக்கை வெளியிடப்படும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. வெளியிடப்பட்ட பின்னர் www.singaporebudget.gov.sg என்ற சிங்கப்பூர் வரவுசெலவுத் திட்ட இணையதளத்தில் வெளியிடப்படும்.