கொரோனா கிருமித்தொற்று சூழலில் உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்றுகூடியதன் தொடர்பில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக வேண்டிய 19 வயது இளம்பெண் அக்லிமா அப்துல் அஸ்மி நீதிமன்றத்துக்கு வராததையடுத்து, அவருக்கு கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சாய் ரகு வைஷ்ணவி ரகு, 19, முகம்மது ஸாக் டேனியல் அகமது ஸாக்கி, 20, ஆகிய இருவருக்கும் இன்று தண்டனை விதிக்கப்பட்டது.
சாய் ரகு வைஷ்ணவி ரகுவுக்கு ஓராண்டு காலத்துக்கு நன்னடத்தைக் கண்காணிப்பு விதிக்கப்பட்டுள்ளது. அவர் இரவு 11 முதல் காலை 6 மணி வரை வெளியில் செல்ல முடியாது. மேலும் 40 மணி நேர சமூக சேவையும் அவர் செய்ய வேண்டும்.
நன்னடத்தைக் கண்காணிப்பில் இருக்க விரும்பாத ஸாக்கிக்கு $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஹேவ்லக் ரோட்டுக்கு அருகில் உள்ள பியோ கிரசென்ட், புளோக் 42ல் 13 பேர் ஜூன் மாதத்தில் ஒன்று கூடியதை இம்மூவரும் கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 25ல் ஒப்புக்கொண்டனர்.
வேறு நால்வருக்கு இந்த வழக்கின் தொடர்பில் ஆகஸ்ட் மாதத்தில் $4,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஒன்றுகூடலில் பங்கேற்ற ஆக இளையவரான 14 வயது சிறுவனுக்கு 12 மாத நிபந்தனை எச்சரிக்கை விதிக்கப்பட்டது.
மேலும் சிலர் மீதான வழக்கு நிலுவையில் உள்ளது.