முன்களப் பணியாளர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக பாலர் பள்ளி மாணவர்கள் உணவுப் பொட்டலங்களுடன் தங்கள் கைப்பட எழுதியுள்ள நன்றி கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
இவ்வாண்டின் “ஸ்டார்ட் ஸ்மால், ட்ரீம் பிக்” இயக்கத்தில் இதுவரை இல்லாத அளவில் பாலர் பள்ளிகள் பங்கேற்றுள்ளனர். இந்த இயக்கம், அதிபர் சவாலில் அங்கம் வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக 950 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 53,000 பிள்ளைகள் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மணி நேரத்தை இதுபோன்ற சமூகப் பணிகளுக்காக அற்பணித்திருப்பதாக இந்த இயக்கத்தைத் தோற்றுவித்த ஆரம்பக்கட்ட பிள்ளைப்பருவ மேம்பாட்டு அமைப்பு இன்று தெரிவித்தது.
பரிவு காட்டியதற்காக பிள்ளைகளுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறிய சிங்கப்பூரின் அதிபர் ஹலிமா யாக்கோப், அனைவருக்கும் பரிவான, ஒருங்கிணைந்த இல்லமாக சிங்கப்பூரை அமைக்க சிங்கப்பூரர்கள் இணைந்து செயல்படும்படி கேட்டுக்கொண்டார்.
2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த இயக்கத்தின் முதல் ஆண்டிலேயே 150 பாலர் பள்ளிகளைச் சேர்ந்த 8,000 பிள்ளைகள் கலந்துகொண்டனர். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு தொடர்ந்து வளர்ந்துவந்தது.
இவ்வாண்டு பங்கேற்ற பள்ளிகளில் ஊட்ரம் வட்டாரத்திலுள்ள YWCA பிள்ளை மேம்பாட்டு நிலையம் வாழ்த்துகளைத் தெரிவித்தது. சிங்கப்பூர் பொது மருத்துவமனையின் முன்களப் பணியாளர்களைப் பாராட்டும் விதமாக பாலர்களின் வாழ்த்துச் செய்திகளைக் காட்டும் காணொளி ஒன்றை அந்தப் பள்ளி தயாரித்துள்ளது. மாணவர்கள் தயாரித்துள்ள சுவரொட்டிகளும் முகக்கவச உறைகளும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
கிறீண்லெண்ட் சைல்டுகேர் ‘அட்’ பொங்கோல் டிரைவ் (Greenland Childcare @ Punggol Drive)பள்ளியைச் சேர்ந்த பிள்ளைகள் வெளிநாட்டு ஊழியர்களுக்காக உணவுப் பொருட்களைச் சேகரித்து ‘எஸ்ஜி எக்சிடண்ட் செண்டர்’ அமைப்பின் மூலம் வழங்கினர்.