லிட்டில் இந்தியா, ஜாலான் புசார் உள்ளிட்ட பல வட்டாரங்களிலுள்ள மொத்தம் 14 பொதுக் கேளிக்கைக் கூடங்கள் கொவிட்-19 தொடர்பான விதிமுறைகள், மதுபான உரிம விதிமுறைகள், அல்லது இரண்டையும் மீறியதன் தொடர்பில் போலிசாரிடம் சிக்கி உள்ளன.
சைனாடவுன், சென்ட்ரல் மால், புகிஸ், ஜாலான் புசார் மற்றும் லிட்டில் இந்தியாவிலுள்ள பொதுக் கேளிக்கைக் கூடங்கள் மற்றும் உடற்பிடிப்பு நிலையங்களில் மத்திய போலிஸ் பிரிவு நடத்திய ஒரு மாத சோதனை நடவடிக்கையின்போது இந்தக் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலிசார் நேற்று தெரிவித்தனர். அந்த 14 இடங்களிலும் இன்னமும் விசாரணை தொடர்கிறது.
அத்துடன் 21 உடற்பிடிப்பு நிலையங்கள் விதிமுறைகளை மீறியிருப்பதும் போலிசாரின் சோதனை நடவடிக்கையில் தெரிய வந்துள்ளது. இவற்றில் 14 நிலையங்கள், உரிமம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தன. மற்ற ஐந்து நிலையங்களும் உடற்பிடிப்புச் சேவை தொடர்பான விதிமுறைகளை மீறியிருந்தன.
உரிமம் இல்லாத ஐந்து உடற்பிடிப்பு நிலையங்களில் பாலியல் சேவைகள் சட்டவிரோதமாக வழங்கப்பட்டன.
உடற்பிடிப்பு நிலையங்கள் மீதான சோதனையில் 19 பேர் அதிகாரிகளிடம் அகப்பட்டனர்.
வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டத்தின் கீழ் அறுவர் குற்றம் புரிந்திருந்தனர்.
மேலும் மூவர், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம், குடிநுழைவுச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்ததற்காக கைது செய்யப்பட்டனர்.
மாதர் சாசனத்தின் கீழ் குற்றம் புரிந்ததற்காக ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் 28 வயதுக்கும் 38 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் மாதர் சாசனம், வெளிநாட்டு ஊழியர் வேலை நியமனச் சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றம் புரிந்ததாக மேலும் நான்கு பெண்கள் கைதாகினர். இவர்கள் 30 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
அரசாங்க ஊழியரின் பணிக்கு இடையூறாக இருந்து வன்செயலில் ஈடுபட்ட 39 வயது ஆடவர் ஒருவரும் கைது இவர்களுடன் செய்யப்பட்டார்.
இத்தகைய விதிமீறல் தொடர்பில் சிக்கும் வர்த்தகங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்துள்ளனர்.