பெண்ணை மானபங்கம் செய்தது, போலிஸ் அதிகாரி உட்பட இருவரைக் கொன்றுவிடுவதாக மிரட்டியது உள்ளிட்ட பல குற்றச் செயல்களைப் புரிந்த ரஷ்ய ஆடவருக்கு 18 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஆண்ட்ரே லரியனோவ், 40, என்ற அந்த ஆடவர் மீது மொத்தம் 20 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மற்றவர்களைக் கொலைசெய்து விடுவதாக மிரட்டல் விடுத்தது தொடர்பில் இரு குற்றச்சாட்டுகள், மானபங்கம், பொது இடத்தில் சண்டையிட்டதன் மூலம் பொது அமைதியைக் குலைத்தது, போலிஸ் சொத்தைச் சேதப்படுத்தியது, இன்னொருவர் மீது எச்சில் துப்பியது, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை மீறியது என மொத்தம் ஏழு குற்றச்சாட்டுகளை அவர் கடந்த மாதம் ஒப்புக்கொண்டிருந்தார்.
கம்போங் ஜாவா சாலையில் இருக்கும் தங்ளின் போலிஸ் வட்டாரத் தலைமையகத்தின் காவலர் இல்லத்தில் நிர்வாணமாகத் தோன்றியது உள்ளிட்ட அவர் மீதான மேலும் 13 குற்றச்சாட்டுகளைத் தண்டனை விதிக்குமுன் மாவட்ட நீதிபதி கிறிஸ்டஃபர் கோ கவனத்தில் கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி கிளார்க் கீயில் உள்ள ஒரு மனமகிழ் மன்றத்தில் 36 வயதுப் பெண் ஒருவரை லரியனோவ் மானபங்கம் செய்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின. பின்னர், அவரிடம் அநாகரிகமாகவும் நடந்து கொண்டார்.
இதையடுத்து, அந்தப் பெண் போலிசுக்குத் தகவல் தந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலிசாருடன் லரியனோவ் ஒத்துழைக்க மறுத்தார். தம்மைப் பற்றிய விவரங்களைக் கூற மறுத்ததோடு, போலிஸ் அதிகாரிகளில் ஒருவரைக் கொன்றுவிடுவதாகவும் அவர் மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து, லரியனோவ் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இவ்வாண்டு ஏப்ரல் 20ஆம் தேதி ஆர்ச்சர்ட் பிளாசாவுக்கு லரியனோவ் சென்றிருந்தார். அச்சமயத்தில் அவர் முகக்கவசம் அணிந்திராததைக் கண்ட அக்கடைத்தொகுதியின் துணை வளாக மேலாளர், அவரை முகக்கவசம் அணியும்படி சொன்னார். அதற்கு இணங்காமல் அவரை முரட்டுத்தனமாக எதிர்கொண்ட லரியனோவ், அவர் மீது எச்சில் துப்பினார். அத்துடன் நில்லாது, “இது ரஷ்யாவாக இருந்திருந்தால் உன்னைச் சுட்டு இருப்பேன்,” என்றும் மிரட்டினார்.