குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,300 பாலர் பள்ளி சிறுவர்களுக்குக் கூடுதல் உதவி வழங்கப்படவுள்ளது. நவம்பர் மாதம் முதல் அவர்களின் பிள்ளை மேம்பாட்டு கணக்கில் (சிடிஏ) $250 சேர்க்கப்படும்.
கல்வி அமைச்சு, இட்டன்ஹவுஸ் சமூக நிதி, சிங்கப்பூர் சமூக அறநிறுவனம் ஆகியவற்றின் கூட்டணியில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கு வெள்ளி என்று அரசாங்கமும் பங்களிக்கும் என்று பங்காளித்துவ அமைப்புகள் நேற்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கூடுதல் $250 செலுத்தும் திட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குத் தொடரும். அதன்படி, தகுதிபெறும் பிள்ளைகளின் கணக்கில் $500 வரை ஓராண்டில் செலுத்தப்படும். மூன்று ஆண்டுகளில் மொத்தம் $1,500 கணக்கில் ெசலுத்தப்படும்.
குறிப்பிட்ட ஏழு பாலர் பள்ளி நிறுவனங்களுக்குக் கீழ் இயங்கும் பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகள் இத்திட்டத்திற்குத் தகுதிபெறலாம். அவர்கள் சிங்கப்பூரராக இருப்பதுடன் மொத்த மாதாந்திர குடும்ப வருமானம் $4,500க்கும் குறைவாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக்குழு (அப்லிஃப்ட்), இத்திட்டம் உருவாக உதவியது. கல்வி இரண்டாம் அமைச்சரும் அப்லிஃப்ட் திட்டத் தலைவருமான மாலிக்கி ஒஸ்மான், ‘இ-பிரிஜ்’ பொங்கோல் லார்ஜ் பிள்ளை பராமரிப்பு நிலையத்திற்கு நேற்று சென்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு ஆரம்பக் கல்வியின் முக்கியத்துவம் குறித்து அவர் நிகழ்வில் வலியுறுத்திப் பேசியிருந்தார்.
“ஒரு பிள்ளையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அடித்தளம் இடுவதில் பாலர் பள்ளி முக்கியப் பங்காற்றுகிறது. ஒரு பிள்ளையின் தன்னம்பிக்கை மற்றும் சமூகத் திறன்களை வளர்ப்பதுடன் அவர்களைத் துடிப்புமிக்க, ஆர்வமுள்ள மாணவர்களாக்கவும் பாலர் பள்ளி ஊக்குவிக்கிறது,” என்றார் அவர்.
கூடுதல் தொகையை இத்திட்டம் வழங்குவதால் தங்களின் குழந்தைகளைப் பாலர் பள்ளிக்கு அனுப்ப மேலும் அதிகமான குறைந்த வருமானக் குடும்பங்கள் முன்வருவர் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் டாக்டர் மாலிக்கி தெரிவித்தார். குழந்தை போனஸ் திட்டத்தின் ஒரு பகுதிதான் ‘சிடிஏ’. இதில் உள்ள தொகையைப் பாலர் பள்ளிக் கட்டணங்கள், மருத்துவக் கட்டணங்கள் போன்ற பிள்ளை வளர்ப்புச் செலவுகளுக்காகப் பயன்படுத்தலாம்.