நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்; சிலோசோ கடற்கரையில் கடலுக்குள் இறங்க அனுமதி இல்லை

நச்சுத்தன்மை வாய்ந்த ஜெல்லி மீன்; சிலோசோ கடற்கரையில் கடலுக்குள் இறங்க அனுமதி இல்லை

1 mins read
a9b5a8cb-361d-4e61-8dd5-71d24fcfdf5f
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

செந்தோசாவின் சிலோசோ கடற்கரையில் கடலுக்குள் இறங்க இப்போது யாருக்கும் அனுமதியில்லை.

அங்கு கடலில் ஒரு வகை பெட்டி ஜெல்லிமீன் காணப்பட்டு இருப்பதே இதற்குக் காரணம்.

ஜெல்லிமீன் இனத்தைச் சேர்ந்த சில சிற்றினங்கள் மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்தவை.

அவை யாரையாவது கொட்டிவிட்டால் மரணம் கூட ஏற்பட்டுவிடும்.

கடலில் குளிக்கும்போது யாரையாவது அந்த மீன் கொட்டிவிட்டால் அவர்கள் வலி தாங்க முடியாமல் வாதம் ஏற்பட்டு மூழ்கிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

சிங்கப்பூரில் இந்த ஆண்டில் குறைந்தபட்சம் இரண்டு பேர் இத்தகைய ஜெல்லிமீன் காரணமாக காயமடைந்து இருப்பதாகத் தெரிய வருகிறது. செந்தோசா நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு அதனுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஓர் அறிவிப்பை வெளியிட்டது.

அடுத்த அறிவிப்பு வரும் வரை அந்தக் கடற்கரைப் பகுதியில் கடலில் குளிக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று அந்த அறிவிப்பு தெரிவித்தது.

ஒவ்வொருவரின் பாதுகாப்பும் நல்வாழ்வுமே மிக முக்கியம் என்பதை அது சுட்டியது.

கடற்கரை மற்றும் கடல்நீர் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு இருக்கின்றன என்றும் செந்தோசா தெரிவித்துள்ளது.

யாராவது இத்தகைய பெட்டி ஜெல்லிமீனை பார்த்தால் அது பற்றி 1800-726-4377 என்ற எண் மூலம் உடனடியாகத் தெரிவிக்கவேண்டும் என்று செந்தோசா நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.