சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையே பாதுகாப்பான பயண ஏற்பாடுகளைத் தொடங்குவது குறித்து இரு நாடுகளும் அறிவித்துள்ளன.
இந்தப் பயண ஏற்பாடுகள் தொடர்பிலான பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் அவற்றுக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 26ஆம் தேதி தொடங்கும் என்றும் இரு நாடுகளும் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையே அத்தியாவசிய வர்த்தக, அதிகாரபூர்வ பயணங்களை மேற்கொள்ள வழிவகுக்கும்.
இந்தோனீசியக் குடிமக்கள், சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகள் இந்தப் பயணங்களை மேற்கொள்ளத் தகுதி பெறுவர்.
சிங்கப்பூர் தரப்பிலிருந்து இந்தப் பயண ஏற்பாடுகள் தொடர்பான விண்ணப்பங்களுக்கு இந்தோனீசிய அரசாங்கம் அல்லது நிறுவனங்கள் ஆதரவு நல்க வேண்டும் என்று இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தோனீசியக் குடிநுழைவுப் பிரிவிடம் அவர்கள் இணையம் வழி விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
சிங்கப்பூருக்கு வரும் இந்தோனீசியர்கள், சிங்கப்பூர் அரசாங்க அமைப்பு ஒன்று மற்றும் இங்குள்ள நிறுவனம் ஒன்றிடமிருந்து தங்களது விண்ணப்பங்களில் ஆதரவைப் பெற்றிருக்க வேண்டும் என்று திருமதி ரெட்னோ கூறினார்.
இந்தோனீசியர்கள் விசாவுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை. மாறாக, ‘பாதுகாப்பான பயண அட்டை’ ஒன்றுக்கு அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் திருமதி ரெட்னோ.
இரு நாடுகளும் பரஸ்பர அடிப்படையில் ஏற்றுக்கொண்டு உள்ள கொவிட்-19 தடுப்பு, பொதுச் சுகாதார நடைமுறைகளுக்குப் பயணிகள் உட்பட்டு நடக்க வேண்டும். பயணங்களுக்கு முன்னும் பின்னும் கொவிட்-19 பரிசோதனைகளுக்கு அவர்கள் உட்பட வேண்டும் என இரு நாடுகளும் தெரிவித்தன.
பயணங்களுக்கு முந்தைய பரிசோதனை புறப்பாட்டிற்கு 72 மணி நேரத்திற்குள் நடத்தப்பட வேண்டும்.
இந்தப் பாதுகாப்பான பயண ஏற்பாடுகள் குறித்த மேல் விவரங்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று இரு நாட்டு வெளியுறவு அமைச்சுகள் தெரிவித்தன.
இந்தோனீசியாவில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அதிகமாக இருந்தும், இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளியல் பங்காளித்துவத்தைக் கருத்தில்கொண்டு இந்தோனீசியாவுடன் பயண ஏற்பாடுகளைத் தொடங்க சிங்கப்பூர் முடிவெடுத்து இருக்கலாம் என்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் சாவ் சுவீ ஹாக் பொதுச் சுகாதாரப் பள்ளித் தலைவரான பேராசிரியர் டியோ யிக் யிங் கூறினார்.
இந்தோனீசியாவிலிருந்து வருபவர்கள் மூலம் இங்கு கொவிட்-19 பரவுவதற்கான அபாயம் குறித்து சிங்கப்பூர் அறிந்துள்ளதைச் சுட்டிய அவர், பயணங்களுக்கு முன்னும் பின்னும் பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் சமூகத்தில் நோய் தொற்றும் சாத்தியத்தைக் குறைக்க முடியும் என்று சொன்னார்.