2017 முதல் கடந்த ஆண்டு வரை குப்பை போடும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்திருக்கிறார். இருந்தபோதும் இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் பலதரப்பட்ட அணுகுமுறையைக் கையாள்வதாகத் தெரிவித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் எத்தனை குப்பை போடும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என புக்கிட் பாத்தோக் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் முரளி பிள்ளை கேட்ட கேள்விக்கு திருவாட்டி ஃபூ அளித்த எழுத்துபூர்வ பதிலில் இவ்வாறு தெரிவித்தார். 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் குப்பை போடுவது தொடர்பில் முறையே 8,800, 8,100, 11,200 புகார்களை தேசிய சுற்றுப்புற வாரியம் பெற்றதாக அவர் சொன்னார்.
இந்த மூன்று ஆண்டுகளில் ஒவ்வொன்றிலும் 26,000 முதல் 37,000 வரையிலானோருக்கு எதிராக வாரியம் நடவடிக்கை எடுத்ததாக அவர் தெரிவித்தார். குப்பை போடுவதைத் தடுக்க கடந்த ஆண்டு முதல் கூடுதலான அதிகாரிகள் அமலாக்கப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக திருவாட்டி ஃபூ கூறினார்.